Monday, April 28, 2014

மாமியாரும், ஜாடியும்

 
ஒரு நாள் பத்து பதினைந்து வருடம் முன்பாக  அதிகாலை நேரம்  ,வாசல் தெளித்து  கோலம் போட்டு விட்டு நிமிர்ந்தேன்.  அன்று வெள்ளிக் கிழமை . கையில் வைத்திருந்த செம்மண் டப்பியை எடுத்து, தண்ணீர் விட்டுக் குழைத்து, கோலத்திற்கு செம்மண் இட்டு முடிக்கவும்,  உப்பு விற்பவன் கைவண்டியில் உப்பு மூட்டையை பாதித் திறந்த வண்ணம்  சாய்த்து  , எங்கள் தெருவுக்குள் நுழையவும்  சரியாயிருந்தது  .  " உப்பு ! உப்பு ! " என்று கூவிக் கொண்டே வந்தார் .

பக்கத்து வீ ட்டு மாமி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து உப்பு வாங்கிக் கொண்டு போனார். பார்த்துக் கொண்டே , நான் உள்ளே நுழைந்து கேட்டை மூடி விட்டு உள்ளே போகத் திரும்பினேன்.

உப்பு விற்பவர் என்னைப் பார்த்து, " உப்பு வாங்கலையா தாயி? வெள்ளிக் கிழமை உப்பு   வாங்கும்மா. மஹாலக்ஷ்மி  வீட்டிற்கு  வருவாள் ." என்று சொல்ல, நானோ, " இதெல்லாம் வியாபார உத்தி ."  என்று மனதில் சொல்லிக் கொண்டே  " இன்றைக்கு வேண்டாம் " என்று உள்ளே நுழைந்து  அடுத்த வேலைகளை ஆரம்பித்தேன்.  இன்று  பள்ளிக்கு சீக்கிரமே வேறு செல்ல வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டே குளிக்கக் கிளம்பினேன்.

குளித்து விட்டு வந்து குக்கரை அடுப்பில் வைத்து விட்டு  நறுக்கி வைத்திருந்த பீன்ஸைப் போட்டு  தாளித்து, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி  எல்லாம் போட்டு  கேசை சிம்மில் வைத்து விட்டு  தட்டை போட்டு மூடினேன் . உப்புப் போடவில்லை என்பது  நினைவிற்கு வர  ,உப்பு  ஜாடிக்குள்  கையை விட  , அதென்னவோ கை உள்ளே  போய்க் கொண்டே இருந்தது. உப்பு தட்டுப் படவேயில்லை. கையால் துழாவி, கொஞ்சமாயிருந்த உப்பைப்போட்டு விட்டு  மேலும் தேவைப்பட,  டேபிள் சாலட்டை  போட்டு அன்றைய சமையலை முடித்தேன்.

உப்பு விற்பவரிடம் வேண்டாம் என்று சொன்னோமே. வாங்கியிருக்கலாம் . சரி , ஆனது ஆச்சு. மாலை  வீட்டிற்கு வரும்போது உப்பு வாங்கிக் கொள்ளலாம் என்று தீர்மானித்து  அவசரவசரமாக பள்ளிக்கு நடையைக் கட்டினேன்.

பள்ளி  வேலையில் ,உப்பு வாங்க வேண்டியதை அடியோடு மறந்தே போனேன் என்று தான் சொல்ல வேண்டும். மாலை  வீட்டிற்குள் நுழைந்ததுமே  , " உப்பு ஜாடியில் உப்பே இல்லை. இப்படியா உப்ப காலியாகும்  வரை  வாங்காமல் இருப்பார்கள். நல்லா குடித்தனம் செய்கிறாய் போ "  என்று மாமியாரிடம் பாட்டு வாங்கினேன். அன்று அவர் மேல் எனக்குக் கோபம் வந்தாலும், அதில் இருக்கும் உண்மை பின்னர் புரிந்தது.  என் மருமகளிடம்  நானும் இப்பொழுது இதை அறிவுறுத்தத் தவறுவதில்லை.

விஷயத்திற்கு வருகிறேன்.  உப்பு வாங்கப் போக வேண்டுமா? அலுப்பாக இருந்தது. என் பெண் கல்லூரியிலிருந்து திரும்பியவுடன் , "கொஞ்சம் உப்பு வாங்க வேண்டுமடி  .ப்ளீ ஸ்.......  கொஞ்சம் வாங்கி வருகிறாயா? " என்று அவளிடம் கெஞ்சினேன்.

" எனக்கு செமஸ்டர் பரீட்சை  வருகிறது படிக்கப் போகிறேன் " என்று அவள் மறுத்தாள் .

பின்னாலேயே  என் பையன் வீட்டிற்கு வர , அவனிடமும் உப்பு வாங்க கெஞ்சினேன்.  அவனும் ஏதோ  ஒரு காரணம் சொல்லி வாங்கிவர  முடியாது  என்பதை சொல்லி விட,

என்னவரை விடுவேனா? அவரிடமும்  சொல்லிப் பார்த்தேன். அவரோ," நாளை ஒரு நாள்  உப்பு இல்லாமல் சாப்பிடுவோம்  என்று  ஒரு தீர்வு சொல்லி விட்டு அவர் வேலையைப் பார்க்க சென்று விட்டார்.

இத்தனை பேரை கெஞ்சியதற்கு, நாமே  சென்றிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு கிளம்ப , அப்பொழுது பார்த்து பக்கத்து வீட்டிலிருந்து சுபா மாமி தன பெண்ணின் வளை காப்பிற்கு  வரச்  சொல்லி  குங்குமச் சிமிழுடன் வர, அவருடன் உட்கார்ந்து அளவளாவினேன். அவர் கிளம்பும் போது மணியைப் பார்த்தால் எட்டு. இந்த ராத்திரியில்  எங்கே கடைக்குப் போவது? நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று டேபிள் சாலட்டை வைத்து  நாளை  சமையலை முடிக்க தீர்மானித்து, இரவு சாப்பாட்டுக் கடையை   ஆரம்பித்தேன். என் மாமியாருக்கு  மட்டும் என் மேல் சரியானக் கோபம்.  ஒன்றும் செய்ய முடியாமல் இரவு உணவை முடித்து விட்டு படுத்தாகி விட்டது.

பாதி ராத்திரி இருக்கும், குளிர ஆரம்பித்தது. இடி, மழை, மின்னல், அறை  ஜில்லென்று இருக்க, எழுந்து பேனை  நிறுத்தி  விட்டுப் படுத்தேன். காலை  ஐந்து மணிக்கு அடித்த அலாரத்தை தலையில் தட்டி  சமாதானப் படுத்தி  விட்டு எழுந்தேன்.

காலை சமையலுக்கு   கல் உப்பு  எடுக்கப் போன கையை  , டேபிள் சால்ட்  இருக்கும் ஜாடி பக்கம் திருப்பினேன்.  உள்ளே கிடந்த ஸ்பூனால் மெதுவாக உப்பு அள்ளலாம் என்று பார்த்தால் ஸ்பூன் " டங் " என்று ஜாடியின்  அடியில் போய் விழுந்தது. உப்பு எங்கே போச்சு? நேற்று  இரவு படுக்கப் போகு முன் கூட  கால் ஜாடிக்கு மேலிருந்ததே.  என்று நினைத்துக் கொண்டே  ஜாடிக்குள் எட்டிப் பார்த்தேன்.

" ஜாடி காலி " . இது எப்படி ?..குழம்பினேன்.

உப்புத் திருட்டு போனது பற்றி   அப்புறம் தீர விசாரித்துக் கொள்ளலாம் . இப்ப சமையலுக்கு என்ன செய்வது?  கடைக்குப் போகலாம் என்றால் மழை  ஆசை தீரக் கொட்டிக் கொண்டிருந்தது.

என் பையன் , " அம்மா, காபி கொடுக்கிறாயா ? " என்று கேட்டுக் கொண்டே வர,, அவன் மேல் எரிந்து விழுந்தேன். நீயாகட்டும் உன் அக்காவாகட்டும், உங்கப்பாவாகட்டும் , எனக்கு எந்த உதவியும் செய்யாதீர்கள்  "என்று திட்ட  கண்ணைக் கசக்கிக் கொண்டே(தூக்க கலக்கம் தான்) என் பெண்ணும் வந்து சேர்ந்தாள் .

" உப்பு இருந்ததே  அம்மா? நேற்று  சட்னிக்கு  போதவில்லை என்று  நான் தானே இன்னும் கொஞ்சம்போட்டேன். அப்ப இருந்ததே " என்று  என் பெண் சொல்ல, அவளிடம், " இதோ பார் ஜாடியை, " என்று ஜாடியை காட்டினேன். அவள், என் பையன் என்று மாறி மாறி   ஜாடிக்குள்  பார்க்க,  என்னவரும் அங்கே ஆஜர். "

" ஏன் எல்லோரும் ஜாடிக்குள் தலையை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். யார் தலையாவது மாட்டிக் கொள்ளப் போகிறது என்று சமய சந்தர்ப்பம் தெரியாமல் ஜோக்கடிக்க "  எனக்கோ பயங்கர எரிச்சல். (பின்னாளில்  அழகான ராட்சசியே பாட்டு டிவியில் வரும் போதெல்லாம் எனக்கு இவர் அடித்த இந்த ஜோக் சரியாய் நினைவிற்கு வரும்.)

அவரும் ஜாடிக்குள் பார்த்து  விட்டு ஸ்பூனால்  அவரும் துழாவ , "வெறும் தண்ணி தான் வருது "  என்று கமல்ஹாசன் பாட்டு மாறி சொல்ல ,

இதற்காகவே காத்திருந்தாற். போல் என் மாமியாரும் , " சொன்னால் கேட்கலை என்றால் இப்படித்தான். " என்று பழி தீர்த்துக் கொள்ள , என் கண்ணில் நீர் தளும்பி , கீழே இறங்கத்  தயாரானது.
திடீரென்று எனக்கு உரைத்தது, அட......உப்பு ஜாடியில் இருந்ததால்  அதுவும் தூள்  உப்பானதால், சீதோஷ்ண  உபயத்தில்  கரைந்து உப்புத்தண்ணீர. ஆகி இருக்கிறது என்பது புரிய உப்பிற்குப் பதிலாக உப்புத் தண்ணீரை வைத்து  சுமாராய் சமையல் முடித்தேன்.

அடுத்த நாளே உப்பை மூட்டையில் வாங்காத குறையாய் வாங்கி வைத்தேன். ஜாடியில் கொட்டினேன்  என்று தானே நினைத்தார்கள். அது தான் இல்லை.இந்த ஜாடியினால் தான் இப்படி சங்கடத்தில் மாட்டிக் கொண்டேன் என்று அழகான பிளாஸ்டிக் டப்பாக்களில் கொட்டி வைத்தேன்.

இதற்கும் என் மாமியார், உப்பை ஜாடியில் தான் வைக்க வேண்டும் என்று புலம்ப ஆரம்பிக்க , வயதானாலே ஏதாவது தப்பு கண்டு பிடிப்பார்கள் என்று அவர் வார்த்தையை காதில்  வாங்க மறுத்தேன்.

பிறகு,உப்பு மட்டுமா பிளாஸ்டிக் டப்பாவில் உட்கார்ந்து கொண்டது. சமையலறையில் அழகழகாய் பல பிளாஸ்டிக் டப்பாக்கள்  வரிசைக்  கட்டி நின்றன..பருப்பு வகைகள் , காபிப்பொடி,புளி,பொடி  வகைகள், சர்க்கரை  என்று எல்லாமே பிளாஸ்டிக்கில் தஞ்சமடைந்தன. ஒண்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டின கதையாய், மண் ஜாடிகளும், எவர்சில்வர் டப்பாக்களும் பாவமாய் பரணில் அடைக்கலமாயின.

இது நிறைய வீடுகளில் நடந்த கதை தான் என்று நினைக்கிறேன்.
ஒரு சில வருடங்கள் பிளாஸ்டிக் மேல் தாங்கொணாக் காதல் இருந்தது உண்மையே!

சில வருடங்களுக்குப் பிறகு ..............
அங்கங்கே பிளாஸ்டிக்கை வில்லன் மாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். சற்றே குழம்பினேன். கொஞ்சம் கொஞ்சமாய், மார்கெட் போன ஹீரோவானார் பிளாஸ்டிக். கொஞ்சம் கொஞ்சமாய் பரணில் இருந்த எவர்சில்வர் டப்பாக்கள்
என்னைப் பார்த்து கிண்டலாய் சிரித்தபடி , மீண்டும் அலமாரியில் தங்கள் தங்கள் இடங்களில் வந்து அமர்ந்து கொண்டன.

ஜாடிகள் மட்டும் பரணில் மூலையோடு மூலையாய்......அதிலிரண்டு உடைந்தும் விட்டன.

ஒரு நாள் ,சுந்தரி , என் தோழி வீட்டிற்கு வந்திருந்தாள். நான் காபிப் போட உள்ளே போனேன். அவளும் என்னோடேயே உள்ளே வந்து டைனிங்டேபிளில் அமர்ந்து கொண்டாள். காபி குடித்துக்கொண்டே இருவரும் வம்படித்துக் கொண்டிருந்தோம்.

என்னோடு பேசிக் கொண்டே அவள் அலமாரியைப் பார்த்து எழுந்து போனாள்.நேராக, உப்பு டப்பாவைத் திறந்தாள்.

அதைப் பார்த்துக் கொண்டே , " இது என்னதிது? உப்பா ....."

" ஆமாம்."

" நீ, படித்தவள் தானே! உன் குடும்பத்தினர் உடல் நலன் மேல் உனக்கு அக்கறையே இல்லையா? புற்று நோய்க்கு பிளாஸ்டிக்கும் ஒரு காரணமாயிருக்கலாம் என்கிற சர்ச்சை கிளம்பியிருக்கிறதே. அந்த விவரங்களை நீ படிக்கிறாயா இல்லையா? " என்று சுந்தரி சரமாறியாகத் திட்ட ,

நானோ," அதெல்லாம் வெறும் சர்ச்சைகள் தானே சுந்தரி.  பிளாஸ்டிக் டப்பாவில் வைத்தால் தான் மழை நாட்களில்   உப்பு கரையாது. " என்று சொல்லவும் அவளுடைய கோபத்தின் டிகிரி  கூடியது.

" நான் அடுத்த முறை வரும் போது, உப்பை இப்படியே வச்சிருந்தே நான் உன்னுடன் பேசவே மாட்டேன் . ஆமாம் ஜாடியே உன்னிடம் கிடை யாதா ? இல்லையென்றால் கண்ணாடி பாட்டிலிலாவது வை. " என்று கோபப்படவும்,

நான் ரிஸ்க் எடுக்கிறேன் என்பது புரிய ,  புதிய ஜாடியில்  மீண்டும் உப்பு கொட்டப்பட்டது.மழைக் காலத்தில் உப்பு  கரைந்தாலும் பரவாயில்லை ,உப்பே விஷமாகி விடக் கூடாதே ! நம்முன்னோர்கள் எல்லாம் மூடர்களல்லர் என்று நினைத்துக்கொண்டே  நிமிர்ந்தேன்.சுவற்றில் படமாயிருந்த என் மாமியார் ," அன்றைக்கே  சொன்னேன் கேட்டியா? "என்று கேட்பது போலிருந்தது.

பிறகு, வீட்டிற்கு வந்த என் தம்பியின் மனைவி, " அக்கா ஜாடி எங்கே கிடைக்கும்? எனக்கும் உப்பு வைத்துக் கொள்ள வேணும் என்று சொல்ல , " அரசனை நம்பி புருஷனை கைவிட்டு விட்டால் இப்படித்தான் தேடி அலைய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு கடையின் பெயரை சொன்னேன்.

இந்த பிளாஸ்டிக் அரக்கனை  வீட்டை விட்டு  விரட்ட  நினைக்கிறேன். முடியவேயில்லையே!.  சமையலறையிலிருந்தாவது   அரக்கனை விரட்ட  தீவிர  முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
அதற்கு முதல் படியாய்  கடைக்குப் போகும் போது மஞ்சள் பை எடுத்து செல்கிறேன் .

அது சரி , நீங்கள் உங்கள் வீட்டு சமையலறையிலிருந்து  பிளாஸ்டிக்  அரக்கனை  விரட்டி விட்டீர்களா.............?


பி.கு :
" மாமியாரும் ஜாடியும் "  பதிவில், ஜாடி  படத்திற்கு,  என் மருமகள், அவளுடைய   உப்பு ஜாடி , கொடுத்து  உதவினாள் .
அவளுக்கு என் ஸ்பெஷல் நன்றி.

எழுதியவர் திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம்.

No comments:

Post a Comment