Wednesday, May 21, 2014

நாடகமே உலகம் --திரைக்குப் பின்னால் -- அல்லி ராணி தர்பார்

திரைக்குப் பின்னால் – 2 – அல்லி ராணி தர்பார்

எங்க ஊரு கோவிலுலெ திருவிளா வந்துச்சு.  திருவிளான்னா பொய்க்கால் குதிரெ, ஒயிலாட்டம் மயிலாட்டம், நாட்டியம், நாடகம், தெருக்கூத்துன்னு இல்லாமையா?  ஒரு நாளு அல்லி ராணி தர்பார்னு நாடகம் நடந்திச்சு.

"என்னாது அலி ராணியா?”

அலி ராணி இல்லேங்க.  அல்லி ராணி தர்பாருங்க.  அல்லிப்பூ கேட்டதில்லே நீங்க?  அது போல அல்லீ அல்லீன்னு ஒரு ராணி.

“அல்லீ அல்லீன்னு ரெண்டு வாட்டியா?  நேத்து கல்பட்டாரு சொல்லிக்கிட்டு இருந்தாரே வெள்ளெக் கொக்கோட விஞ்ஞான ரீதியான பேரு ‘சிகோனியா சிகோனியா’ ன்னு அது போலவா?”

இல்லீங்க.  ஒங்க மனசுலெ நல்லாப் பதியணும்னு தான் ரெண்டு வாட்டி சொன்னேன் பேரெ.

“மேலெ சொல்லுங்க கதெயெ.”

சொல்றேன்.  நாடகம் பாக்க வந்தவங்க கூட்டம் நல்ல கூட்டம்.  ஊரே தெரண்டு வந்திருந்தீச்சுன்னு சொல்லணும்.

கிணி கிணின்னு மணி சத்தம் கேட்டீச்சு.  அப்போ தெரெக்கிப் பின்னாடி ஒரு சின்ன வெளிச்சம் மெதுவா கோளி முட்டெ வடிவத்துலெ சுத்த ஆரம்பிச்சு அந்தரத்துலெ ஒரு எடத்துலெ அப்பிடியே நின்னீச்சு.  பாட்டு ஒண்ணு கேக்க ஆரம்பிச்சுது, “மங்கள விநாயகா சரணம்…….. எங்கள் நாடகத்தே காத்திடணும்” னு.  கூடவே கூட்டு பாட்டா இன்னும் அஞ்சாறு குரலுங்க, மங்கள வினாயகா சரணம்னு.

‘தெரெச் சீலெ தடிமனான இருக்குமே?  அது பின்னாடி நடக்குறது எப்பிடீங்க தெரியும்னு கேக்குறீங்களா?  எங்க ஊருலெ நாடகம் போடுறது நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியா என்ன?  எங்க ஊருக் காரங்க ஏளெட்டு பேரு சேந்து போடுறது தானே?  நாலு பளய சிலெயெ சேத்து தெச்சு கீளெ ஒரு நீள மூங்கிலெ வெச்சுக் கட்டினது தானுங்களே தெரெச் சீலெ?  பின்னாடி சூடம் கொளுத்தினா தெரியாது அந்த சீலெ வளியா?

சூடம் அணெஞ்சிது.  தடதடன்னு ஏளெட்டு பேரு ஓடுற சத்தம்.  கூடவே, “சீக்கிரமா நகத்துங்கடா நாற்காலீங்களே” ன்னு.

“தூக்க முடீலீங்க இந்த அரியாசனத்தெ.  பொண கனம் கனக்குது இது.”

“பொண கனம் கனக்குதுன்னா நாலு பேரா சேந்து தூக்குங்கடா.”

நாற்காலிகளெ நகத்துற சத்தம் அடங்கவும் தெரெ மேலெ போகுது.  மேடேலெ நடுவுலெ அரியாசனத்துலெ கிரீடம் வெச்சுக் கிட்டு ஒரு பொண்ணு.  அதான் அல்லி ராணி.  அவளுக்கு முன்னாடி ரெண்டு பக்கமும் வரிசையா அஞ்சாறு நாற்காலிங்க.  அதுங்களுலெ தலெப்பாக் கட்டிக் கிட்டு ஆளுங்க.

ஓரு ஆளு மேடெ ஓரெத்துலேந்து ஒடெம்பெ இடுப்புக்கு மேலெ முன்னாடி வளெச்சுக் கிட்டு, கையி ரெண்டெயும் கூப்பி வெச்சுக் கிட்டு வரான்.  “ஒற்றா சொல் நீ வந்த விசயம் என்ன?  என்ன சேதி கொண்டு வந்திருக்கிறாய்?” கேக்குறா அல்லி ராணி.

குனிஞ்ச தலெ நிமிராமெ கூப்பிய கை அகலாமெ ஆரம்பிக்கிறார் அவர்’  “அல்லி அரெ… சாணி அரெ… அல்லி அரெ… சாணி அரெ…” ன்னு ஒடெஞ்செ கிராம போனு பிளேட்டு மாதிரி.

“அடேய் அது அல்லி அரெயும் இல்லெ.  சாணி அரெயும் இல்லேடா.  முளுசா அல்லி அரசாணியாரேன்னு சொல்லுடா” ன்னு சற்று உரக்கவே கத்துகிறார் இயக்குனர் இருள்சாமி.

“கவலெ உடு வாத்தியாரே.  நான் சமாளிச்சுக்குறேன்.  புச்சு இல்லெ அவன்.  அதான் நடுங்குறான்.  நடுக்கத்துலெ சொல்லிக் குடுத்த பாடத்தெ மறந்தூட்டான்.”  இது அல்லி ராணி மெல்லிய குரலில்.  முன் வரிசெலெ இருக்குற எங்க காதுலெ மட்டும் உளுது அது.

தொடர்கிறாள் அல்லி ராணி.  “ஒற்றரே ஏன் நடுங்குகிறது உங்கள் உடல்?  சொல்லுங்கள் சொல்ல வந்ததை.”

உடல் நடுக்கம் முளுசுமா நிக்காமலே ஆரம்பிச்சாரு ஒத்தரு, “ராணியாரே அருச்சுன மகாராசன்னு…”

சொல்ல வந்ததெ முடிக்கலெ அந்த ஆளு.  கோவத்தோட ஏந்திரிக்கிறா அல்லி ராணி.  கையிலெ இருந்த கத்தியெத் தூக்கிப் புடிச்சிக் கிட்டு, “என்னது மகாராசனா?  என்ன விட ஒசந்தவனாடா அவன்?  காட்டுடா எங்கெ இருக்கான் அவன்.  ஒரு கை பாக்குறேன் அவனெ” என்றபடி வேகமாக மேடையில் தூக்கிப் பிடித்த வாளுடன் ஒரு சுற்று வருகிறாள்.  அப்போது…..

“என்ன ஆச்சு?  என்ன ஆச்சு?”

அல்லி ராணியோட பின்னிய ஜடெ மேடெ ஓரத்துலெ சட்டீலெ வெச்சிருந்த ரோஜாச் செடி முள்ளுலெ மாட்டிக் கிச்சு.  ஜடெ, டோப்பா, கிரீடம் மூணுமா கீளெ உளுந்துது.  அல்லி ராணி இதெ கவனிக்காமெ சுத்தி வந்தா மேடெயெ, “ஆருடா அருச்சுன மவராசன்…. பாருடா இந்த அல்லி ராணி பராக்கிரமத்தே” ன்னு பாடிய படி தன் கிராப்புத் தலையோடு.

அல்லி ராணிக்கு ஏது கிராப்புத் தலென்னு கேக்குறிங்களா?  அல்லி ராணியா வந்தது ராணிபார்ட்டு ரங்கதொரெங்க.  அவரு கொரலு சன்னமா பொம்பிளெ கொரலாட்டம் இருக்குங்க.  அதுனாலெ எங்க ஊருலெ எப்போ ட்ராமா போட்டாலும் ரங்கதொரெ தாங்க ராணி பார்ட்டு.

சனங்கள்ளாம் பெரிசாக் கை தட்டினாங்க அந்த வேடிக்கேயெப் பாத்து.  அல்லி ராணிக்கு, அதான், நம்ம ரங்கதொரைக்கு ஒரே சந்தோசம் சனங்க தன்னோட வீரா வேச வசனத்தெப் பாத்துதான் கை தட்டுறாங்கங்கற நெனெப்புலெ.

இயக்குனரு இருளுசாமி இந்த வாட்டி கொஞ்சம் ஒரக்கவே கத்தினாரு, “உடுங்கடா தெரெயெ” ன்னு.  தெரெ விளுந்தீச்சு.

எதுக்கு இன்னும் குந்திக்கிட்டு இருக்கீங்க.  கட்டுங்க நடெயெ ஊட்டெப் பாக்க.  அதான் நாடகம் முடிஞ்சிடிச்சே.

02-12-2012                                            நடராஜன் கல்பட்டு

Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>

No comments:

Post a Comment