Saturday, August 30, 2014

பல்லாங்குழி விளையாட்டு! முன்னோர்கள் வகுத்த வழி!

 காரைக்குடி,The King of Chettinad
‪#‎பல்லாங்குழி‬:

கொஞ்சம் நெதானமா படிங்க. எம்புட்டு பெரிய சொத்த எழந்துருக்கோம்னு புரியும் ..

பல்லாங்குழிங்குறது வெளையாட்டா சொல்லிக் குடுத்த குடும்ப நிர்வாகம்.

மொதல்ல எப்படி வெளையாடணும்னு பாப்போம்.

ஒரு பக்கத்துக்கு ஏழு குழி. குழிக்கு அஞ்சு முத்து (பண்ணெண்டு முத்து போட்டும் வெளையாடுவாக)ஒரு குழில இருந்து எடுத்து அடுத்து வார குழிக்கு ஒன்னொன்னா போடுவாக. முத்து முடிஞ்சதும் அடுத்த குழில இருந்து முத்துகள எடுத்து அதே மாதிரி போடணும். ஒரு வேள, அடுத்த குழி காலியா. இருந்தா, அதுக்கு அடுத்த குழில எம்புட்டு முத்து இருக்கோ அம்புட்டும் முத்தும் போட்டு வந்தவுகளுக்குச் சொந்தம். (செல சமயம் அது நெறையாவும் இருக்கும் செல சமயம் ஒன்னுமில்லாமையும் கூட போகலாம்.)

காலியான குழியில, அடுத்து சேந்து வார முத்துகள் மொத்தமா நாலு சேந்துருச்சுனா, அதுக்குப் பேரு “பசு” அது ஆரு பக்கம் இருக்கோ அவுகளுக்குச் சொந்தம்.
வெளையாட்டுல ஒரு பக்கம் செயிக்கச் செயிக்க இன்னொரு பக்கம் தெக்கம்(தொக்கம், தக்கம், பற்று) விழும். கடைசில தோத்தவுகட்ட அஞ்சு முத்துக்கும் கொறவா இருந்தா, அஞ்சு முத்துக்குப் பதிலா, ஒரு ஒரு முத்தா போட்டு கஞ்சி காச்சி வெளயாடுவாக.

சரி இத எதுக்கு வெளையாண்டாக?
சடங்காயிட்டா பொம்பளப்புள்ளைக்கு வெளையாட கொடுக்குறது இதத்தேன்.
ஒடலளவுல சமைஞ்சதும், அடுத்து மனசளவுல சமையணும்ல? அப்பதான முழு பொம்பளையா இருக்க முடியும்? அதேன்!
சடங்கான புள்ளையோட சோட்டுப்புள்ளைக மாத்தி மாத்தி வந்து ஒக்காந்து வெளையாடுங்க. இது முழுக்க முழுக்க மூளைய வச்சு வெளயாடுறதுதேன். இது சூது கெடையாது, ராசி அதிர்ஷ்டங் கெடையாது. புத்தி நுணுக்கமிருந்தா செயிச்சுக்கலாம்.

எப்படி செயிக்கிறது...?
தன்கிட்ட இருக்குற பொருள எப்படி பெருக்கணுங்குறதுதேன் இந்த வெளையாட்டோட சூச்சுமம்.
எந்தக் குழில ஆரம்பிச்சா எந்தக் குழில எம்புட்டு சேருங்குறது, வெளையாட வெளையாட நெனவுல சேத்துக்கிட்டே போகணும்.
“பசு” சேர்க்கணும் (அதுக்கேத்தாப்ல வெளையாடணும்) பசுங்குறது நாலு முத்துதேன்னு சாதாரணமா நெனைக்கக் கூடாது. “பசு”னா செல்வம்னு அர்த்தம். அதச் சிறுகச் சிறுக சேர்த்துப் பழக்குறதுதேன் நோக்கம்.
கடைசில கஞ்சி காச்சுறதுனு ஒரு வாய்ப்பிருக்கு. தான் செயிச்சா எதிராளிக்கு கஞ்சி காச்சுற வாய்ப்பு குடுக்கணும். எல்லாம் தோத்துப்புட்டானு மிதப்பா வெளையாண்டா, அடி மட்டத்துல இருந்து கூட எதிராளி செயிச்சு வந்துரலாம். ஒரு வேள நம்ம கஞ்சி காச்சுற நெலைக்கு வந்துட்டாலும் சோர்ந்து போயிறக் கூடாது. அங்கன இருந்து கூட (வறுமையில இருந்து கூட) மேடேறிடலாம். மேடேறிடணும். அதேன் ஒரு குடும்பத்தக் காக்கப் போறவளுக்கு அழகு.

இது வாழ்க்கைக்கான வெளையாட்டு. அதுனாலதேன். சடங்குக்குச் சீரா, தன் வீட்டுக்கு வரப் போற பொண்ணுக்கு பல்லாங்குழி வாங்கிக் குடுக்குறது தாய்மாமன் வழமையா வச்சிருந்தாக. கல்யாணம் பண்ணி அடுத்த வீட்டுக்குப் போறப்ப கட்டாயம் பல்லாங்குழிய சீர் வரிசைல சேத்துக் குடுத்தாக.

ஒன்னொன்னா தொலைச்சுக்கிட்டு வாரோம்.

நன்றி : காரைக்குடி,The King of Chettinad 

நன்றி திரு வினைதீர்த்தான் அவர்கள்  

2 comments:

  1. நானும் விளையாடி இருக்கேன். :)))

    ReplyDelete
  2. எங்கள் வீட்டிலும் உள்ளது. நாங்க ஆறு முத்துகள் போடுவோம். மூன்று வந்தால் பசு...:) காசி தட்டும் விளையாட்டும், கட்டும் பாண்டியும், சீதையாட்டமும் இதில் உண்டே...

    ReplyDelete