Friday, May 8, 2015

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 3

கவுதம் சன்னாவுடன் பேட்டி. பேட்டி எடுப்பவர் எடின்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த ஹ்யூகோ கொரிங்கே


பேரா யூகோ: இதிலிருந்து இரு கேள்விகள் எழுகின்றன. நீங்கள் இரு விஷயங்களைக்குறிப்பிட்டீர்கள். முதலாவதாக, துவக்கத்திலேயே அயோத்திதாசர் ஜாதியை முன்நிறுத்தாது தமிழர் உரிமைகளுக்கும், சுதந்திரத்துக்கும் குரல் கொடுத்தார்

சன்னா: தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுத்தார் என்பதை விட தமிழ் அடையாளத்தை முன்நிறுத்தி ஒடுக்கபட்ட மக்களின் உரிமைகளுக்கும் அவர்களின் சுதந்திரத்துக்கும் இவ்வகையில் போராடினார்

பேரா யூகோ: சரி. அதே சமயம் இரட்டைமலை சீனிவாசன் ஜாதியை வைத்தே மக்களை திரட்டினார் . இப்படி இதில் இரு வித சிந்தனைகள் இருக்கையில் தலித் கோட்பாடு தமிழ்நாட்டில் வேர் விட்டுள்ளதா? அல்லது, இன்னமும் ஜாதிதான் தலித் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறதா?

சன்னா: நீங்கள் தலித் உட்சாதி பிரிவுகள் பற்றிய விவாதங்களைக் குறிக்கிறீர்களா?

பேரா யூகோ: ஆம்

சன்னா: நீங்கள் சொல்லுவது உண்மை. தலித் எனும் அடையாளம் 1972க்கு பின்புதான் பரவலானது. 1972ல் இந்திய தலித் சிறுத்தைகள் அமைப்பு முதல்முதலாக தலித் எனும் வார்த்தையை தம்மைக்குறிக்க பயன்படுத்தியது. 1972விலேயே அது மராட்டியத்தில் பரவலானாலும் தமிழகத்தில் அச்சொல் அங்கீகாரம் பெற 1990 வரை ஆனது. 1990க்கு பிறகு இந்த ஒற்றைச்சொல்ல் மாத்திரமே தலித்களை ஒன்றுபடுத்தி எழுச்சியை உருவாக்கியதாக நாம் கூற முடியாது. விழுப்புணர்வு அதிகமாகி இச்சொல்லை வைத்து அமைப்புகள் உருவாகின. இவ்வார்த்தை அரசியலில் பயன்படுத்தப்பட்டு பல்வேறு பறையர், பள்ளர். சக்கிலியர்/அருந்ததியரை பொதுவான ஒரு தளத்தில் ஒன்றுபடுத்தி தமிழக/ இந்திய அளவில் அரசியலுக்கு கொண்டுவந்தன. சமூக அளவிலும் இவவர்த்தையால் இதே விளைவுகள் உருவாகின எனக்கூற முடியாது. சமூக அளவில் பேசுவதானால் இது இன்னமும் நடைபெறவில்லை. ஆக பொதுவான ஒரு தலித் அடையாளத்தை உருவாக்குவதில் பெரிய முன்னேற்றம் காணும் நிலை இருப்பதாக தெரியவில்லை. இவர்கள் தலித் அடையாளத்தை முழுமையாக தழுவியதாகவும் கூற முடியாது. அதை அரசியல் நோக்கிலேயே பயன்படுத்துகிறார்கள். அதே சமயம் நீங்கள் சொல்லும் உட்சாதி உணர்வுகள்- பள்ளர், பறையர், சக்கிலியர் அடையாளங்கள்- இவை 6- 7 ஆண்டுகளுக்கு முன்பு முக்கியமானதாக இல்லை. ஆனால், இப்போது திராவிட கட்சிகளால் தூண்டிவிடபட்டு, இந்த உட்சாதி விவகாரங்கள் சமூகநீதி எனும் போர்வையில் பேசபட்டும், பிரசாரம் செய்யப்பட்டும் வருகின்றன. இத்தகைய உட்சாதி உணர்வுகளை தூண்டிவிடுவதில் திராவிட கட்சிகள் பெரும்பங்கு வகிக்கின்றன

பேரா. யூகோ: திராவிட கட்சிகள் மட்டுமல்ல, கம்யூனிஸ்டு கட்சிகளும் கூடத்தானே?

சன்னா: ஆமாம். நாம் கம்யூனிஸ்டுகளையும் அதில் சேர்க்கலாம். இதில் வரலாற்றுரீதியாக செயல்படுவதாக அவர்கள் கூறினாலும், அவர்களின் செயல்பாட்டில் அத்தகைய வரலாற்று புரிதல் எதையும் அவர்கள் காட்டவில்லை. குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றை அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை. அவர்கள் இன்னமும் மக்கள் ஊர் என்றும் சேரி என்றும் பிரிந்து கிடப்பதை புரிந்துகொள்ள முடியாமலேயே இருக்கிறார்கள். இதை முதலில் புரிந்துகொண்டால் தான் அவர்கள் இதற்கான தீர்வுகளை சிந்திக்க ஆரம்பிபபர்கள். நீங்கள் வரலாற்றைபுரிந்துகொள்ளாமல் பிரச்சனைகளை மட்டுமே பிரச்சாரம் செய்துவந்தால், எங்கிருந்து இப்பிரச்சனைகள் வந்தன என்பதை எப்படி அறிவது? அருந்ததியர்களுக்கு ஒரு விதமான பிரச்சனைகள் உள்ளன. பள்ளர்களுக்கு வேறு விதமான பிரச்சனைகள் உள்ளன. பறையர்களுக்கு இன்னொருவிதமான பிரச்சனைகள் உள்ளன. ஒவ்வொரு உட்சாதி பிரிவுக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் உள்ளன. இதில் ஒரே ஒரு தனிபட்ட பிரச்சனையை அரசியல் நோக்கில் கையில் எடுக்கையில் அடுத்த உட்சாதியை நீங்கள் கைவிட்டு விடுகிறீர்கள். இதன்பின் சாதி அடையாளங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அழிக்க நினைத்த நடைமுறைகள் இவ்வகையில் வலுப்பெறுகின்றன. இடைநிலை சாதிகளுக்கு இது பெருத்த அனுகூலமாக இருக்கிறது. இதற்கான முக்கிய காரணம் தலித் வரலாறு பற்றிய புரிதல் இல்லாததே

பேரா யூகோ: நீங்கள் இன்னொரு விஷயத்தைக் குறிப்பீட்டிர்கள். அயோத்திதாசரின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பதை

சன்னா: ஆம். அவை இன்னமும் நிறைவேற்றபடவில்லை

பேரா யூகோ: ஆக, அப்படியானால் தமிழ்நாட்டில் இன்னமும் தீண்டாமை நிலவுகிறதா? இன்னமும் கொடுமைகள் நடக்கிறதா? இம்மாதிரி விஷயங்கள் இன்னமும் நிகழ்கிறதா?

சன்னா: தீண்டாமையா? அதாவது ஒவ்வொரு கிராமமும் ஊர் என்றும் சேரி என்றும் பிளவுபட்டு கிடக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களை ஏன் சேரிகளில் வைத்திருக்கிறார்கள்? ஏனெனில் அவர்கள் தீண்டதகாதவர்கள் என்பதால் தான். உலகெங்கும் கெட்டோக்கள் உள்ளன. கெட்டோ இல்லாத உலகநாடு எதுவுமே கிடையாது. சுற்றுபுற சீர்கேடு, மதசீர்கேடு என ஏதோ ஒரு சீர்கேட்டை காரணம் காட்டி இத்தகைய கெட்டோக்கள் உருவாக்கபடுகின்றன. சமூகம் முன்னேறமடைய, அடைய இந்த கெட்டோக்கள் இல்லாதொழிந்துள்ளன. இன்று கருப்பின அமெரிக்கர்களுக்கு கெட்டோக்கள் உள்ளன, ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கான கெட்டோக்கள் உள்ளன ஆனால் ஊர் என்றும் சேரி என்றும் திட்டமிடப்பட்ட பிரிவினையை எங்கேயும் காண இயலாது. ஆக ஊரும், சேரியும் இருக்கும்வரை தீண்டாமை தொடர்ந்துகொண்டே இருக்கும். இதை நேருக்கு நேர் காண இயலுகிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இப்படி இத்தனை பகிரங்கமாக இனப்பாகுபாடு இருப்பதைக்காண இயலாது. ஆக தமிழகத்திலும் இந்தியாவிலும் இத்தகைய சூழல் இருக்கையில் தீண்டாமை ஒழிந்துவிட்டதாக நாம் எப்படிக்கூற இயலும்? தீண்டாமை அனைத்து வடிவங்களிலும் 100% தொடர்கிறது. இதுவே உண்மை.


____________________

http://www.southasianist.ed.ac.uk/article/view/147/88

Interview with Gowthama Sannah, Propaganda Secretary of the VCK, Chennai,
26th September 2012
by Hugo Gorringe
Dr. Hugo Gorringe (Hugo.Gorringe@ed.ac.uk)

J. Gowthama Sanna g.sannah@gmail.com or http://gsannah.wordpress.com


மொழியாக்கம்: செல்வன்

________________________________________________________

செல்வன் - holyape@gmail.com
________________________________________________________