Wednesday, August 19, 2015

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்- விழுப்புரம்

--கோ.செங்குட்டுவன்.

விழுப்புரத்தின் பழமைவாய்ந்த கிறிஸ்துவ தேவாலயம். இந்த ஆலயம் 1878இல் உருவாக்கப்பட்டது.

முதல் பங்குதந்தையாக SOURIE MARINDER பொறுப்பேற்றார். தொடர்ந்து பல ஆண்டுகள் வெள்ளைக்கார பாதிரியார்கள்தான் இங்கு பங்கு தந்தைகளாக இருந்திருக்கின்றனர்.

1886இல் ஐரோப்பிய கட்டடக் கலை நயத்துடன் கூடிய சவேரியார் ஆலயம் கட்டப்பட்டது.



தொடக்கத்தில் நங்காத்தூர் பங்கில் இருந்த விழுப்புரம் புனித சவேரியார் ஆலயம் 1895இல் தனிப்பங்காக உருவானது.

வழுதரெட்டி, தும்பூர், ஏனாதிமங்கலம், ஆலாத்தூர் ஆகிய கிராமங்கள் இதன் பங்கிற்கு உட்பட்டவையாகும்.

பழைய ஆலயம் கட்டப்பட்டு நூறாண்டு ஆனதையொட்டி புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயர் வி.எஸ்.செல்வநாதர் முயற்சியில் தற்போதுள்ள புதிய ஆலயம் 02.12.1986இல் எழுப்பப்பட்டது.


இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் தேதி புனித சவேரியார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழா டிசம்பர் 3ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இக்காலக்கட்டங்களில் அலங்கரிக்கப்பட்டத் தேரில் புனித சவேரியார் நகரை வலம் வருவார்.

இங்கு, 1876ஆம் ஆண்டு முதலான பிறப்பு, இறப்பு, ஞானஸ்தானம், திருமணம் போன்ற சடங்குகள் தொடர்பான ஆவணங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவது சிறப்பிற்குரியது.

2010வாக்கில் புனித சவேரியார் ஆலயத்திற்கு நான் சென்றபோது, பங்கு தந்தையாக இருந்த கே.பால்தெலாமூர் அவர்கள், தன் வயதான காலத்திலும், பழமையான ஆவணங்களை எனக்கு காண்பித்ததோடு, அவற்றை புகைப்படம் எடுக்கவும் அனுமதி அளித்தார்.


இந்நேரத்தில் அவருக்கும் ஆலயத்திற்கும் என் நன்றிகள் உரித்தாவதாக...!  

________________________________________________________
 
கோ.செங்குட்டுவன் 
ko.senguttuvan@gmail.com
________________________________________________________

No comments:

Post a Comment