Friday, October 23, 2015

வீணை

-- கவிஞர் ருத்ரா.





நரம்புகள்
காஷ்மீரிலிருந்து குமரிவரை
பின்னல் இட்டதில்
ஒரு வீணை செய்து
மீட்டுகின்றோம்.
பல மொழி
பல இனம்
பல மதம்
பல ராகங்கள் முழங்கினாலும்
நமக்கு கேட்பது
ஒரே வர்ண மெட்டு.
கல்வி எனும் ஆதார சுருதி
எங்கோ ஒரு மூலையில் இருக்கும்
மண்ணாங்கட்டியையும்
மாணிக்கக் கதிர் வீசச்செய்யும்.
ஒரு எருமை மாட்டை கொல்வதற்கா
அந்த வெற்றித்திருமகள்
பவனி வந்தாள்?
பள்ளிக்கூடங்கள்
வறுமையின் வெறும்
எலும்புகூடுகளாய்
இற்று விடாதிருக்க‌
இங்கே சீற்றம் கொண்டாள்.
லஞ்சமும் ஊழலும் தான்
அந்த எருமை மாட்டின் இரு கொம்புகள்
என்று அவள் புரிந்து கொண்டாள்.
இந்த‌
சுதந்திர தேவி சீற்றம் கொள்ளட்டும்.
கேவலம் சுண்டல் பொரி கூட‌
ஓட்டின் மின்னணு பொறிகளை
விலைக்கு வாங்கி விடும்
அவலங்கள் மீது
அவள் சூலம்
சீற்றம் கொள்ளட்டும்.
ஆம்!
சீற்றம் கொள்ளட்டும்.

 
 
கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்

ruthraasivan@gmail.com


No comments:

Post a Comment