Monday, November 16, 2015

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 5

-செல்வன். 
பேரா. யூகோ: ஆனால் 1987/1988/1989 காலகட்டத்தில் தானே அவர்கள் அம்பேத்கரின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார்கள்?

சன்னா: அவர்கள் மொழிபெயர்த்தது உண்மையே. ஆனால் அதற்கும் முன்பே பல குறுவெளியீடுகளில் அவரது படைப்புகள் வெளிவந்தன. சரி, இதைகூட விடுங்கள், உங்களை இன்னொரு கேள்வி கேட்கிறேன். அந்த காலகட்டத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் அம்பேத்கரின் சிலைகள் இருக்கவில்லையா?

பேரா யூகோ: இருந்தன. ஆனால் இந்த அளவு எண்ணிக்கையில் இருக்கவில்லை

சன்னா: அம்பேத்கரை பொறுத்தவரை மக்கள் அவரது கருத்துக்களை படித்தபின் போராட்டத்தில் இறங்கவில்லை. மக்களை பொறுத்தவரை அவர் பெரும்பாலும் ஒரு குறியீடு மட்டுமே. அவர் நமக்காக உழைத்தார், நமக்காக போராடினார், அதனால் அவர் நம் ரட்சகர் என்றே மக்கள் கருதுகிறார்கள். அதனால் கிராமம் கிராமமாக அம்பேத்கரின் சிலைகளை எழுப்பி போராடும் உணர்வை அதன்மூலம் வளர்த்தார்கள். பொதுமக்கள் போராட கொள்கை, தத்துவம் போன்றவை அவசியமில்லை. தலித் அல்லாத சிந்தனையாளர்கள் கருதியது என்னவெனில் போராட ஒரு தத்துவ அடித்தளம் வேண்டும் என கருதியதே. அப்படி கருதியதால் தான் இந்த இடைப்பட்ட காலத்தை அவர்கள் முற்றிலும் தவறாக புரிந்து கொண்டார்கள். ஆக நாம் 1990 அம்பேத்கர் நூற்றாண்டுவிழாவை தலித் அல்லாதோருக்கான விழிப்புணர்வுகாலம் என புரிந்துகொள்ளலாமே ஒழிய, அது தலித்துகளை பொறுத்தவரை ஒரு நல்ல வாய்ப்பு மட்டுமே. இந்த கோணம் பலராலும் புரிந்துகொள்ளபடவில்லை என்றே கருதுகிறேன்

பேரா யூகோ: நல்ல பாயிண்ட், வெகு சிலரே இதைப்பற்றி பேசுகிறார்கள். பேராசிரியர்கள் நூலகங்களில் அமர்ந்தபடி அயோத்திதாசரைப்பற்றியும் தலித் இயக்கங்களின் தொடர்வரலாறு குறித்தும் பேசுவார்கள். இயக்கங்கள் ஓரிரவில் அல்லது ஒரே நாளில் எழமுடியாது என்பதும் தெளிவு. புரட்சிக்கான விதைகள் முதற்கண் ஊன்றபடல் அவசியம். நாமும் இயக்கங்களின் முந்தைய வரலாற்றை ஆராய்வதும் அவசியம். நான் இதுவரை பேசியவர்களின் உங்களைபோல தெளிவாக இதை பேசியவர்கள் யாருமே இல்லை. ஆனால் இதுவரையிலும் யாருமே 1957 முதல் 1990 வரை வாழ்ந்த தலித் தலைவர்களைப்பற்றி எழுதியதில்லை

சன்னா: அவர்கள் அத்தலைவர்களைபற்றி கொஞ்சமும் அக்கறை காட்டியதில்லை

பேரா யூகோ: ஆம். இவர்கள் அத்தலைவர்களை புறக்கணித்தது மட்டுமின்றி அவர்களைப்பற்றி எழுதவும் இல்லை

சன்னா: ஆமாம். சிவராஜ் (குடியரசு கட்சி தலைவர்) ஒரு முக்கியமான தலைவர். அவர் அம்பேத்கருக்கு அடுத்த நிலையில் அவருடன் இருந்தவர். ஆனால் அவரைப்பற்றி யாருக்கு என்ன அக்கறை சொல்லுங்கள்? அவர் அம்பேத்கரை விட ஒரு வருடம் மட்டுமே மூத்தவர், ஆனால் அவரைப்பற்றி எழுதுபவர்கள் யாருமே இல்லை. அம்பேத்கரின் மறைவுக்கு பின் அவர் அமைக்க விரும்பிய குடியரசுக் கட்சியை என் சிவராஜ் அமைத்தார். அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சியை அமைக்க விரும்பி அதற்கான விதிகளையும், கொள்கைகளையும் எழுதினார். ஆனால் அக்கனவு நனவாகும் முன்னரே மறைந்தார்.  குடியரசுகட்சியை உருவாக்கி அகில இந்திய அளவில் கொண்டு சென்றதில் பெரும்பங்கு என். சிவராஜுக்கு உண்டு. அப்போது அதிகம் புகழ் பெற்ற தலைவர்கள் தமிழகத்தில் பலர் இருந்தார்கள். அம்பேத்கர் 1956ல் இறந்தார். குடியரசுக்கட்சி 1957ல் உதயமாகிறது. 1962 தேர்தலில் திமுக குடியரசுக் கட்சியுடன் கூட்டணி சேர்கிறது. கூட்டணி உருவாகும் சமயத்தில் தமிழகத்தில் இருந்த முக்கிய தலித் தலைவர் ஆர்ய சங்கரன் ஆவார். அவருக்கு பின் பள்ளிகொண்டா எம். கிருஷ்ணசாமி, ஜி.மூர்த்தி, சக்திதாசன், சேப்பன், எல். இளையபெருமாள், வை.பாலசுந்தரம் மற்றும் பல தலைவர்களும் பிற்காலத்தில் வந்த இயக்கங்களுக்கு வழிகோலினார்கள். இந்த தலைவர்களை யாருமே அங்கீகரிக்கவில்லை. திமுகவுடன் கூட்டு சேரும் அளவுக்கு அக்காலகட்டத்தில் குடியரசுக்கட்சி வலுவானதாக இருந்தது. என்.சிவராஜ் வேலூரில் போட்டியிட்டு இரண்டாமிடத்தை பிடித்தார். (அவர் இதற்குமுன் 1957ல் செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றிருந்தார்). சிவராஜ் வேலூர் எம்பி தொகுதியில் போட்டியிட்டார். அதே சமயம் வேலூரில் இருந்த ஆறு தொகுதியிலும் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இரு கட்சியினரும் ஒரே கூட்டணி என்பதால் இருவரும் வென்றிருக்க வேண்டும். திமுக ஆறு தொகுதியிலும் வென்றிருந்தால் குடியரசு கட்சியும் எம்பி தேர்தலில் வென்றிருக்க வேண்டும். ஆனால் அதிர்ச்சியளிக்கும் முறையில் ஆறு திமுக வேட்பாளர்களும் வெற்றிபெற்றும், குடியரசு கட்சி வேலூர் எம்பி தேர்தலில் தோற்கடிக்கபட்டார். இது யார் குற்றம்? திமுகவினர் அவருக்கு ஓட்டு போட்டிருக்கவேண்டும் இல்லையா? கூட்டணிகட்சிக்கு துரோகம் செய்த திமுக தலித்களின் உரிமைக்கும்,அடையாளத்துக்கும் போரிடுவதாக எப்படிக்கூற முடியும்?

திராவிட கட்சிகள் மற்றும் திராவிட இயக்கங்களின் இயல்பே இதுதான். தலித் தலைவர்களின் குரலை ஒலிக்க அனுமதிக்கபடாததால் தலித் இயக்கமே இல்லை என நாம் முடிவுகட்ட முடியாது. ஆக, அம்பேத்கர் மறைந்து 1990 வரையிலான 30 ஆண்டு காலகட்டத்தில் குறிப்பிடதக்க இயக்கங்கள் தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் இயங்கியே வந்துள்ளன. அவற்றை ஏற்றுகொள்ள மனமில்லாத நிலையாலேயெ இவ்வகை விவாதங்கள் தோன்றுகின்றன. 1990ல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னரே தலித அல்லாத சிந்தனையாளர்கள் கண்ணில் தலித் செயல்பாடுகள் தெரிய துவங்கின

பேரா யூகோ: குடியரசுகட்சி போன்ற கட்சிகள் தம் சொந்த சின்னத்தில் போட்டியிடவில்லை என்பதும் திமுக அல்லது அதிமுக போன்ற கட்சிகளின் சின்னத்திலேயே போட்டியிட்டன என்பதும் சரியான தகவல் தானே?

சன்னா: ஆம். துவக்க நிலையில் (1952 மற்றும் 1957 தேர்தல்களில்) குடியரசுக்கட்சி சொந்தமாக யானை சின்னத்தில் நின்றது. சட்டசபை தேர்தலில் காமன்வீல் கட்சியுடன் உதயசூரியன் சின்னத்தில் (இதை பின்பு திமுக சுவிகாரம் எடுத்தது) நின்றது. அதன்பின் தலித் கட்சிகள் தனித்துபோட்டியிடும் அளவு ஓட்டுவங்கியை திரட்ட முடியாததால் அவர்களால் சொந்த கட்சி சின்னத்தில் நிற்க முடியவில்லை. அவர்களுக்கு கொடுக்கபட்ட தொகுதிகள் 1 அல்லது 2 எனும் அளவிலேயே இருந்ததால் திமுகவுடன் கூட்டணி வைத்தால் உதயசூரியன் என்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் இரட்டை இலை என்ற நிலையிலேயே அவர்கள் போட்டியிட நேர்ந்தது. இப்படித்தான் அவர்களின் இயக்கங்கள் ஒடுக்கபட்டன.

(திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்..)
 



 

  செல்வன்

 
holyape@gmail.com





 

No comments:

Post a Comment