Thursday, April 14, 2016

ஐயம்... அய்யம்

  இராம.கி.


ஐ எழுத்தின் வடிவம் பற்றிய பேச்சு மின்தமிழ் மடற்குழுவிலெழுந்தது. ”அகர இகரம் ஐகாரமாகுமெனத் தொல்காப்பியரே சொன்னதால் சங்ககாலத்தில் ஐக்கொரு தனிவடிவம் இருந்திருக்குமெ”ன்றும், நமக்கு அது கிடைக்கவில்லை” என்றும், அதற்குமாறாய், ”ஐகார வடிவம் ஏற்படுவதற்குமுன், பழந்தமிழியில் அஇ/அய் என எழுதியதாயும்” கருத்துக்கள் சொல்லப்பட்டன. இச்சிக்கலுக்கு முடிவு காண, ஐகார எழுத்தை மட்டும் தனித்துப்பாராது தமிழின் உயிர், மெய் எழுத்துவடிவங்கள் எல்லாவற்றையும் சேர்த்துப்பார்ப்பது நல்லதென்பேன். (உயிர்மெய்க் கீற்றுக்களையுங்கூடச் சேர்த்துப்பார்ப்பது இன்னும் நல்லதெனினும் நேரமில்லாததால் அவற்றை இக்கட்டுரையிற் தவிர்க்கிறேன்.)

அதேபோது தொடர்புள்ள இன்னொரு புலம்பலை இங்கு சொல்லவேண்டும். உயிர்மெய்க் கீற்றுக்கள் எல்லாமே எழுத்துவடிவத் தொடக்கத்தில் மேலும், கீழும், பக்கவாட்டின் இருபுறமும் இழுக்கப்பட்ட கிடைக்கோடுகளின் மாற்று வடிவங்களேயாகும். ”எவ்விடத்தில் இடுகிறோம்?” என்பது தவிர இவற்றிற்கு எழுத்திலக்கணக் குறிப்புகள் கிடையா. ஆகச்சிறுத்த, பொருட்படுத்த முடியாத, (கால், கொக்கி, சுழி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, கொண்டை, சுழிக்கொண்டை, சிறகு என்ற) உயிர்மெய்க்கீற்றுகளை எந்தத் தமிழிலக்கணமும் இதுவரை விதந்து குறிப்பிட்டதில்லை. இவற்றின் இலக்கணமெது? எவற்றைக் குறிக்கின்றன? - என்று கூட யாரும் எங்கும் பதியவில்லை. ஆனாலும் எழுதுந்தேவை கருதி அக்காலத் திண்ணைப்பள்ளிகளில் ”உயிர்மெய்க் குறியீடுகள்” என்றே பெயரிட்டுச் சொல்லிக் கொடுத்தார். 65 ஆண்டுகளுக்குமுன் இளமையில் அப்படிக் கற்ற பட்டறிவு எனக்குண்டு.

இக்கால ஒருங்குறி ஆவணங்களில் இவற்றை உயிர்க்குறியீடுகள் - vowel markers - என்று பிழையாய்க் குறிப்பர். ”கால்” என்பதே ஆகார உயிர்க்குறியீடெனில் ஆகார உயிரின் கீழ்மாட்டில் வருஞ் சுழி பின் என்ன குறியீடாம்? அதை ஒருங்குறிச் சேர்த்தியங் கண்டுகொள்ளவில்லையே? மகனை அப்பன் பெயரிலேயே அழைப்பேமென்று அடம்பிடித்தாலெப்படி? தமிழிலக்கணத்தின் வழிகாட்டல்களை மறுத்து ”தமிழெழுத்து வரிசையை அபுகிடா” என்று தப்புந்தவறுமாய் வரையறுத்த ஒருங்குறி ஆவணத்தைப் பின்பற்றி இற்றைத் தமிழாய்வாளர் பிழைச்சொற்களைக் கையாள்வது கொஞ்சங்கொஞ்சமாய் நம்மரபைப் போக்கடிக்கும். (ஒருங்குறிக்கு வால்பிடிப்போர் தூண்டுதலால் பலவிடங்களில் vowelized consonant markers என்பதற்கு மாறாய் vowel markers எனக் கேட்கையில் என்போன்றோர்க்கு வருத்தமே எஞ்சுகிறது. வணிக வல்லாளுமை கொண்ட ஒருங்குறியின் போதாமையைப் பேசத் தொடங்கினால் மாளாது வேறுவழியின்றி இதைப் பொறுத்துக்கொண்டு எல்லோரும் ஆளவேண்டியுள்ளது.] 

இனி இக்கட்டுரையின் பேசுபொருளுக்கு வருவோம். படவெழுத்துக்களில் தொடங்கி, குத்துக்கோடுகள், கிடைக்கோடுகள், வளைவுகளாலான எழுத்துக்களை உருவாக்கி மாறியபோது கல், மரம், ஓடு, மாழை போன்றவற்றிற் கீறியே தமிழரெழுதினர். (சொற்பிறப்பியலின் படியும் இழுத்தது எழுத்தாயிற்று என்பார் பாவாணர். நம் ”எழுத்தும்” மேலையிரோப்பிய ”letter” உம் பொருளிணை காட்டுவதைச் சொன்னால் இராம.கி.க்கு எப்பொழுதுமே பொல்லாப்பு.) மரத்திலெழுதியது பின் பட்டையில், ஓலையில் எழுதுவதற்கும் விரிந்தது. கல், மரம், ஓடு, மாழை போன்ற எழுதுபொருட்களில் எழுதுவதற்கும் நெகிழும் ஓலையில் எழுதுவதற்கும் நுணுகிய வேறுபாடுள்ளது. ஓலையின் நீட்டுவாக்கில் நார்களுள்ளதால், எழுத்தின் கிடைக்கோடுகள் ஓலையைக் கிழித்துவிட வாய்ப்புக்களுண்டு. இதைத் தவிர்க்கும் முகத்தான், ஓலைப்பயன்பாடு கூடக்கூட, எழுத்துக்களின் கிடைக்கோட்டு நீளங் குறைந்து, குத்துக்கோடுகள் வளைந்து எல்லா எழுத்துக்களும் வளைவுகளும் வட்டங்களும் கொள்ளத்தொடங்கின.

ஒரு நுட்பியலென்பது எழுத்துக்களை மாற்றவுஞ்செய்யும்; நிலைபெறவுஞ்செய்யும். கல்/மரம்/ஓடு/மாழை போன்றவற்றில் வெட்டியது சிற்சில மாற்றங்களுடன் எழுத்துக்களை ஓரளவு நிலைக்கவே வைத்தது. அதேபொழுது ஓலையிற்/தாளிற் கீறியது காலவோட்டத்தில் எழுத்துக்களை மாற்றியது. ஏனெனில் சுவடிகளைப் படியெடுக்கையில் ஒருவர் கையெழுத்துப்போல் இன்னொருவர் கையெழுத்து இருக்காது அல்லவா? ஓர் ஓலைச்சுவடிக்கு ஆயுட்காலம் என்பது ஏறத்தாழ 150 ஆண்டுகளே என்னும்போது இன்றுள்ள சங்க இலக்கியங்கள் 13/14 ஆம் எடுவிப்புக்கள் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். இற்றையெழுத்தில் நாம்படிக்கும் சங்க இலக்கியங்கள் தாம்தோன்றிய காலத்தில் முந்தை எழுத்துவடிவிலே இருந்தன. நம்மில் யாரும் 2300 ஆண்டுகளுக்கு முன்னுள்ள சுவடியைப் பார்த்ததேயில்லை.

(இற்றை இகரங்கூடத் தாளால் மாறிய தோற்றமே காட்டுகிறது. 19 ஆம் நூற்றாண்டு இகரம் இதனினுஞ் சற்று மாறுபட்டது. இதைப் பேசினால் வேறுபக்கங் கொண்டுசெல்லும். என்னைக்கேட்டால் 13/14 ஆம் ஆண்டிலிருந்த இகர வடிவிற்கு நாம் மாறினால் இற்றைத் தமிழ் அச்சு/கணியெழுத்துகளில் இருக்கும் வடிப்புச்சிக்கலைத் தீர்க்கலாம். வடிப்புக் கிறுவியலைப் பற்றியெலாம் பேசுமளவிற்குத் தமிழ்க் கணிமை வந்துவிட்டதா, என்ன?. தமிழெழுத்துக்களைக் கணித்திரையில் காண்பதிலும், பேச்சிலிருந்து எழுத்து, எழுத்திலிருந்து பேச்சு, எந்திர மொழிபெயர்ப்பு என்று சொலவம் முழக்குவதிலே நாம் எல்லோரும் குளிர்ந்துபோய் விடுகிறோம். அப்புறமெங்கே இதிலெல்லாங் கவனஞ் செலுத்துவோம்?)

ஒன்றுமட்டுஞ் சொல்லலாம். 350 ஆண்டுகளுக்கு முன்வந்த அச்சுநுட்பியலும், 40/50 ஆண்டுகளுக்கு முன்வந்த கணிநுட்பியலும், இவற்றின் இடையாட்டமும் தமிழெழுத்துக்களை முழுதாக நிலைபெறச் செய்துவிட்டன. இப் புதுநுட்பியல்கள் வந்ததாலேயே தமிழெழுத்துச் சீர்திருத்தங்களை இன்று பேசுவதிற் பொருளில்லாது போயிற்று. அன்றைக்குப் பெரியார் செய்தது சரி. இன்றைக்கு அவர்பெயரைச் சொல்லிச் சிறார்கல்வியைக் காரணங்காட்டிச் சீர்திருத்தம்பேசுவது வெறும் பம்மாத்து; கொஞ்சமும் உள்ளீடில்லாத பேச்சு. 

எழுத்துத்திரிவை மேலும் பார்ப்போம். வட்டார எழுதுபொருட் பயன்பாடு அந்தந்த நாடுகளுக்கேற்ப மாறியது. பனையோலை பெரும்பாலும் வறண்ட பாண்டியிலும், தென்சேரலத்திலுமே கிடைத்தது. அதற்காக வடசேரல, சோழ நாடுகளில் பனையோலை கிடைக்கவேயில்லையென்று சொல்லமுடியாது. விழுக்காட்டு மேனி தென்பகுதிகளிலே அதிகங்கிடைத்தது, அவ்வளவுதான். எப்பகுதிகளில் அதிக ஓலை கிடைக்கவில்லையோ, அங்கு இலக்கிய ஆவணங்கள் குறைந்தே பேணப்பட்டன. தமிழ்ச்சுவடிகள் தென்பாண்டியில் பெரிதுங்கிடைத்தது அப்படித்தான். ஓலை மிகாவிடங்களில் கல்வெட்டுகளும், செப்பேடுகளுமே மிகுந்தன. முன்சொன்னது போல் தமிழியெழுத்து பெரிதும் உருவம் மாறாது ஓலையிலா எழுதுபொருட்களில் இருந்துவந்தது. அதேபொழுது ஓலை பெரிதும் பயன்பட்ட பாண்டியிலும், தென்சேரலத்திலும் தமிழியெழுத்து கொஞ்சங்கொஞ்சமாய் வளைந்து நெளிந்து வட்டெழுத்தாய் மாறியது இயல்பான ஒன்றுதான். எல்லாம் கை பண்ணிய வேலை.

கடுங்கோன் வழியினரைத் தோற்கடித்து விசயாலய வழியினர் பாண்டியரை இல்லாமற்செய்த நிலையில் (குறிப்பாக இராசராசன் காலத்தில்) தம் ஆட்சி நன்குசெயற்பட எழுத்தை மாற்றவேண்டிய தேவை சோழருக்கு ஏற்பட்டது. ஏனெனில், வட்டெழுத்தின் அளவுமீறிய வளைவால் எழுத்துக்களின் தனியடையாளங் குலைந்து பொருள்புரியாதுபோகும் நிலை ஏற்கனவே பாண்டிநாட்டில் இருந்தது. அரசாணை மூலம் வட்டெழுத்தைத் திருத்தாமல், சோழ எழுத்தையே பாண்டிய, தென் சேரல நாடுகளில் புழங்கவைக்க சோழர் ஆணையிட்டார். அதனால் வட்டெழுத்து முடிவுற்றது. தென்சேரலத்தில் மட்டும் மேல்தட்டுவருக்க அரண்மனைப் புழக்கங்களில் வட்டெழுத்து நீடித்தது.

1600களில் வட்டெழுத்துக் குழப்பத்தைப் போக்கும் வகையிலும், அளவிற்கு மீறிய சங்கதப் புழக்கத்தை நேரிமப்படுத்தும் வகையிலும் வடசேரலத்தில் புழங்கிய கிரந்தத்திலிருந்து மலையாள எழுத்துக் கிளைத்து, அதுவே தென்சேரலத்திற்கும் பரவியது. மலையாள மொழி தனியெழுத்துப் புழக்கத்தாலேயே மலையாள மொழி நிலைபெற்றது. இல்லாவிட்டால் அது தமிழின் வட்டாரக் கிளைமொழியாய் நிலைத்திருக்கும். (இப்பொழுதுங்கூடத் தமிங்கிலத்தை ஒரு தனிமொழியாய் நிலைக்கவைக்கும் வாய்ப்பாகத் தமிழ் ஒருங்குறிக்குள் வேற்றொலி எழுத்துக்களைக் கொணரச் சிலர் விடாது முயல்கிறார். தமிழர் சற்றே கண்ணயர்ந்தாலும் மலையாளம் வேற்றம் 2.0 மீண்டும் ஏற்படலாம். ”ஐயையோ, சங்கதத்தைத்தான் நாங்கள் காப்பாற்றுகிறோம், தமிழுக்கும் இதற்கும் தொடர்பேயில்லை” என்று சிலர் சொல்வது வெறுங் கண்கட்டுவித்தை. ”உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவுகலவாமை வேண்டும்” என்றார் வள்ளலார். நான் கிரந்தத்திற்கு எதிரியில்லை. ஆனால் தமிழுக்குள் கிரந்தம் தேவையற்று நுழையவேண்டாம் என்பவன்.) 

அதேபொழுது பல்லவ, சோழ எழுத்து 5/6 ஆம் நூற்றாண்டுகளுக்கு அப்புறம் ஓரளவு மாறாமலும் இல்லை. (கொடுமணம், பொருந்தல், அநுராதபுரம், கீழடி போன்ற ஊர்களிற் கிடைத்த தொல்லியற் செய்திகள் உறுதிப்படுகையில், ”பழந்தமிழியே இந்தியாவில் முதலெழுந்த அகரவரிசை; அதிலிருந்தே வட பெருமி எழுந்திருக்கலாம்” என்ற கருத்து அண்மையில் வலுப்பெறுகிறது. இதனாற் பேரனைத் தாத்தனெனும் போக்கு மறையும். இதேபோலப் பழந்தமிழியிலிருந்தே கிரந்தம் எழுந்ததெனும் புரிதலும் வலுப்படும். இதை இன்னும் விளக்கப்புகுந்தால், வேறுபுலத்திற்கு இழுத்துச் செல்லும். எனவே, தமிழி>பெருமி, தமிழி>கிரந்தம் என்ற வளர்ச்சிப்போக்குகளைப் விவரிப்பதைத் தவிர்க்கிறேன்.)   

கடந்த நூறாண்டுகாலக் கல்வெட்டாய்வின் மொத்தப்பலனாய், இன்று இணையமெங்கும் சுற்றிக்கொண்டிருக்கும், History of Tamil Script என்ற படம் தமிழி>பல்லவ>சோழ எழுத்தில் ஏற்பட்ட வெவ்வேறு உயிர், மெய்த் திரிவுகளை நமக்கு இனங்காட்டும். வெவ்வேறு எழுத்துக்கள் எக்காலகட்டத்தில் இற்றைவடிவத்திற்கு வந்துசேர்ந்தன என்பதைச் சற்று ஆழவாய்ந்தால் மேலுஞ்சில உண்மைகள் புலப்படும்.

காட்டாக உயிரெழுத்துக்களில் அ என்பது 8 ஆம் நூற்றாண்டிலேயே இற்றை வடிவத்திற்கு வந்துசேர்ந்துவிட்டது. ஆ என்பது 13 ஆம் நூற்றாண்டில் இற்றைவடிவம் பெற்றிருக்கிறது. இ என்பது 12/13 ஆம் நூற்றாண்டில் நிலைத்த உருவம் பெற்று அச்சுத்தொழில் காரணமாய் 19 ஆம் நூற்றாண்டில் சட்டென்று இற்றையுருவம் பெற்றிருக்கிறது. அதாவது நிலைத்த உருவம் சட்டென்று மாறிப்போனது.. ஈ என்பது 12 ஆம் நூற்றாண்டில் இற்றையுருவங் கொண்டது.  உ -வும் ஊ-வும், எ-யும் 5/6 ஆம் நூற்றாண்டுகளில், இற்றையுருவம் பெற்றுவிட்டன. ஐ- யும் ஒ -வும் 9 ஆம் நூற்றாண்டில் இற்றையுருவம் பெற்றன. ஏ, ஓ, என்பது வீரமாமுனிவருக்கப்புறம் வடிவம் பெற்றது. ஔ என்ற எழுத்து 18/19 ஆம் நூற்றாண்டுகளில் அச்சுவடிவம் வந்தபிறகே உருவம் பெற்றிருக்கின்றது.

மெய்யெழுத்துக்களை எடுத்துக்கொண்டால், ப் என்ற எழுத்து 3 ஆம் நூற்றாண்டிலும் (பழந்தமிழியின் வளைவு ப் - ற்கும் இற்றைச் சதுர ப் - ற்கும் பெரிதாய் வேறுபாடு கிடையாது), ல்.ள்.ன் என்பன 6 ஆம் நூற்றாண்டிலும், ட்,ண்,ம்,வ் ஆகிய எழுத்துக்கள் 8/9 ஆம் நூற்றாண்டுகளிலும், க்,ங்,ச்,ஞ்,த்,ந்,ய்,ர்,ற் என்பன 8/9 ஆம் நூற்றாண்டுகளில் ஓரளவு மாற்றம்பெற்று முற்றுமுழுதாக 13/14 ஆம் நூற்றாண்டுகளிலும் நிலைபெற்றிருக்கின்றன. சிறப்பு ழகரம் மட்டும் 17 நூற்றாண்டுதான் இற்றைவடிவம் பெற்றிருக்கிறது. இதுவும் ஒருவேளை அச்சுத்தொழிலால் இந்த மாற்றம் பெற்றதோ, என்னவோ?,  

8/9 ஆம் நூற்றாண்டுகளில் தான் விசயாலயச் சோழர் ஆட்சி சோழநாட்டில் ஊன்றிப்பல்வேறு கல்வெட்டுக்களை எழுப்பி. செந்தரத்தைக் கட்டிக்காக்கத் தொடங்கியது. இந்தக் கொடிவழியினரின் ஆட்சி 13 ஆம் நூற்றாண்டில் இறுதி பெற்று இவருக்குப் பின்வந்த பிற்காலப்பாண்டியர் மீண்டும் வட்டெழுத்துக்கு மாறாமல் சோழர் எழுத்திலேயே கல்வெட்டுக்களை ஏற்படுத்தினர். கிட்டத்தட்ட 15 ஆம் நூற்றாண்டே பிற்காலப் பாண்டியர் ஆட்சி முடிவிற்கு வந்தது. அவருக்கு அப்புறம்  வந்த அரசர்கள் செந்தரப்படுத்தப்பட்ட எழுத்தையே பயன்படுத்தியிருக்கிறார். 16 ஆம் நூற்றாண்டு முடிவில் அச்சுத் தொழில் எழுத்தை நிலைப்படுத்தியிருக்கிறது.

சோழரின் கல்வெட்டுப் பயன்பாடே இற்றைத் தமிழெழுத்தை உறுதிப்படுத்தியது என்பது இப்படத்தைப் பார்த்தால் தெற்றென விளங்கும்.

இனி ஐக்கு வருவோம். 8/9 ஆம் நூற்றாண்டு அகரத்தையும், (180 பாகை சுற்றிய) இகரத்தையும், யகரத்தையும் பாருங்கள். அஇ என்று அடுத்தடுத்து எழுதாமல், அற்றை அகரத்தின் கீழ் (180 பாகை சுற்றிய) இகரத்தை எழுதினால் அப்படியே ஐகாரங் கிட்டும். அதே போல அற்றை அகரத்தின் கீழ் அற்றை யகரத்தை எழுதினாலும் அப்படியே ஐகாரங் கிட்டும். எனவே ஐகாரம் என்ற எழுத்து அஇ/அய் என்பதை அடுத்தடுத்து எழுதாது ஒன்றின் கீழ் எழுதிய புதுவடிவம் என்பது புரியும்.

இந்தப்புரிதலோடு  
-------------------
அகர இகரம் ஐகாரமாகும்
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்
-------------------
என்ற தொல்காப்பிய நூற்பாக்களைப் படித்தால் 8/9 ஆம் நூற்றாண்டு வரை ஐகார வடிவம் இல்லாது போனதின் காரணம் புரியும். நான் ஐகார வடிவத்தைப் போக்கச் சொல்லவில்லை. அந்த வடிவம் அஇ அல்லது அய் என்பதன் எழுத்துச் சுருக்கம் என்றே சொல்லவருகிறேன். இந்தக் காலத்தில் கணி வந்தற்காக & என்ற சுருக்கெழுத்தைத் தூக்கியா எறிகிறோம்? ஐ தேவை தான்.



___________________________________________________________

இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com/
___________________________________________________________
 



No comments:

Post a Comment