Thursday, May 19, 2016

வாணிகச் சாத்தும் தமிழகத்தின் வணிகப் பெருவழிகளும்

-- தேமொழி 


3- Main Picture-Saathu vazhi
பண்டைக்காலத்தில் “வணிகப் பெருவழிகள்” பல தமிழக நகர்களை இணைத்ததையும், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையின் “பாலக்காட்டுக் கணவாய்” வழியாக மேற்குக் கடற்கரையில் தொடங்கும் வணிகப் பெருவழி ஒன்று இக்கால கோவை, கரூர், திருச்சி நகர்கள் வழியாக கிழக்குக் கடற்கரையின் பூம்புகார் துறைமுகம் வரை நீண்டிருந்தது எனநாம் அறிவோம். ஒரு வணிகப் பெருவழியாக நகர்களை இணைத்து வணிகர்கள் கூட்டம் தங்கள் பொருட்களைக் கொண்டு செல்ல உதவிய இத்தடம் ‘இராஜகேசரி பெருவழி’ எனவும் அழைக்கப்பட்டது. பாலக்காட்டுக் கணவாய் வழியாகச் செல்லும் இந்த பண்டைய வணிகப் பெருவழியே இன்றைய “தேசிய நெடுஞ்சாலை 67″ (NH 67- National Highway 67) எனப் பரிணாம வளர்ச்சி கூட அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
சேர நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடையே அமைந்த இந்த வணிகப் பெருவழி போன்றே, பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்குமான பெருவழி ஒன்று கம்பம் பள்ளத்தாக்கு வழியாக இடுக்கி செல்லும் பெரும் பாதையாக இருந்திருக்கிறது என “தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்” அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இது இக்கால ஆரியங்காவு – செங்கோட்டைக் கணவாய் வழியாகக் கொல்லம் வரை அமைந்திருக்கக்கூடிய “தேசிய நெடுஞ்சாலை 744″ (NH – 744)யின் ஒரு பகுதியின் முந்தைய வடிவமாகவும் இருந்திருக்கக் கூடும். இது இக்காலத்தில் தென்காசியையும் கொல்லத்தையும் செங்கோட்டை கணவாய் வழி இணைக்கிறது. இக்கணவாய் பாலக்காட்டுக் கணவாய் போன்ற அகண்ட கணவாயன்று, குறுகிய ஒன்றே. தொடர்ச்சியாகஅமைந்து, கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் தொடர்பைத் துண்டிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் கோவை அருகில் அமைந்த பாலக்காட்டுக் கணவாய், தென்காசி அருகில் செங்கோட்டைக் கணவாய் ஆகியவற்றைத் தவிர்த்து தெற்கே தென்குமரிக்கரையை ஒட்டி ஆரல்வாய் மொழிக் கணவாயும் அமைந்துள்ளது. இந்த மூன்று கணவாய்களும் பண்டையக்காலத்திலும் மேற்குக் கடற்கரையை அடைய உதவும் வணிகப் பெருவழியாகவே அமைய வாய்ப்புகள் இருந்திருக்கின்றன.

தொல்லியல் சான்றுகள்:1-  Ancient Trade Routes Tamil Nadu 1பண்டைய வணிகப் பெருவழிகள் இருந்ததையும் அவற்றின் அமைவிடங்களையும், அந்த வணிகப் பெருவழிகளில் இருந்த ஊர்களையும் சான்றுகளுடன் உறுதிப்படுத்த உதவுவது, பெருவழிகள் பற்றிய கல்வெட்டுகளும்; அத்தடங்களிலும் ஊர்களிலும் அகழாய்வில் கிடைத்த அக்கால நாணயங்கள், வணிகப் பொருட்கள் போன்ற தடயங்களே.

கல்வெட்டுகள்:
கொங்குப்பகுதியில் அசுரர் மலைப்பெருவழி, சோழமாதேவிப்பெருவழி, பிடாரிகோயில் பெருவழி, வீர நாராயணப்பெருவழி  எனப் பல பெருவழிகள் இருந்துள்ளன.  அப்பகுதியில் தெக்கன் திட்டு எனவும் காற்றாடும் பாறை எனவும் வழங்கப்படும் இடத்தில் 'இராசகேசரிப்பெருவழி' பற்றிய தகவல் தரும்  கல்வெட்டு ஒன்று,  முனைவர் பூங்குன்றன்  அவர்களால் 1976 –ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி  கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.  இக்கல்வெட்டு சோழ அரசன் முதலாம் ஆதித்தன் ( கி.பி. 871-907) காலத்தியக் கல்வெட்டு எனவும்  நிறுவப்பட்டுள்ளது. நாட்டிலேயே பழமை வாய்ந்த ஒரு பெருவழி பற்றிய கல்வெட்டு என்பது இக்கல்வெட்டின் சிறப்பு.



ஸ்வஸ்திஸ்ரீ கோஇரசகேசரிப் பெருவழி
திருநிழலு மன்னுயிருஞ் சிறந்தமைப்ப
ஒரு நிழல் வெண்டிங்கள் போலோங்கி – ஒரு நிழல்போல்
வாழியர் கோச்சோழன் வளங்காவிரி நாடன்
கோழியர் கோக்கண்டன் குலவு.


என்ற செய்தியுடன் கூடிய அக்கல்வெட்டு அரசனைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் 'நிழற்படை' என்னும் படை, அக்காலத்தில்  அரசனைமட்டும் பாதுகாக்கவில்லை,  பெருவழியைக் கண்காணிக்கவும் செய்தது என்ற செய்தியைத் தருகிறது.  மக்களோடு மக்களாக வீரர் என்று தெரியாவண்ணம் மறைந்து நின்று நிழற்படையினர் பெருவழியைக் கண்காணித்தனர் என்பதாகப் பூங்குன்றன் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாமண்டூருக்கு அருகில் உள்ள உக்கல்  என்ற ஊரில் 'இராசராசன் கிணறு' என்றழைக்கப்படும் கிணற்றின் கல்வெட்டுத் தகவல்படி;  கண்ணன் ஆவூரன் என்ற தலைவன், தனது அரசன் இராஜராஜன் பெயரால் கிணறு வெட்டுவித்து, தண்ணீர் இறைத்த பணியாளருக்கு நாளொன்றுக்கு  அரசாங்க முத்திரையிடப்பட்ட 'அருமொழிதேவன் மரக்கால்' என்ற அளவில் இரண்டு மரக்கால் நெல் கூலி கொடுப்பித்ததைக்  கூறுகிறது.  இது அக்காலப் பெருவழியில் இருந்த கிணறு எனவும்  அக்கல்வெட்டு தெரிவிக்கிறது. 
அகழாய்வுத் தடயங்கள்:
கோயம்புத்தூர் அருகில், பண்டைய வணிகப் பெருவழியில் அமைந்த, வெள்ளலூர் (போத்தனூருக்குச் சமீபத்தில் இருப்பது) என்ற ஊரில் 1843 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 1891, 1931 மற்றும் 1939 ஆண்டுகளிலும் அகழ்வாராய்ச்சியின் பொழுது உரோம தேசத்துப் பழங்காலக் காசுப் புதையல்கள் கிடைத்து வருவதை “தொல்லியல் அறிஞர் ஆர். நாகசாமி” குறிப்பிடுகிறார்.
பதிற்றுப்பத்தில் கொடுமணம், ‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்’ என்று அரிசில்கிழாரால் குறிப்பிடப்பட்ட “கொடுமணல்” என்ற ஊர் நொய்யல் ஆற்றின் கரையின் தென்பகுதியில் அமைந்த ஒரு ஊர். அரிய கல்மணிகள் உற்பத்தி செய்வதில் புகழ் பெற்று சங்க காலத்தில் சிறந்த நகரமாகத் திகழ்ந்துள்ள கொடுமணல் ஈரோட்டில் இருந்து தென்மேற்கில் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சங்க காலத்தில் இவ்வூர் சிறப்புற்றிருந்ததற்குக் காரணம், வணிகப் பெருவழியில் அமைந்ததே என்பது “தொல்லியல் அறிஞர் ச. செல்வராஜ்” அவர்களது கருத்து. கொடுமணல் அமைந்திருப்பது சேரநாட்டையும் சோழ நாட்டின் பூம்புகாரையும் இணைக்கும் முதன்மை வணிகப் பெருவழியிலாகும்.
இது போன்றே, வடக்கு நோக்கிச் செல்லும் பெருவழி ஒன்று, விசயமங்கலம், சத்தியமங்கலம் கடந்து பவானி ஆற்றின் துணை ஆறான மோயாற்றுப் பள்ளத்தாக்கு வழியாக இன்று மைசூர் என அழைக்கப்படும் எருமையூர் என்ற ஊரைச் சென்றடைகிறது என்றும்; தெற்கே செல்லும் பெருவழியொன்று, காங்கேயம், தாராபுரம், அயிரைமலை, பழநி வழியாக மதுரையை அடைகிறது எனவும்   மேலும் சில வணிகப் பெருவழிகளைப் பற்றியும் தொல்லியல் அறிஞர் ச. செல்வராஜ் அவர்கள் குறிப்பிடுகிறார்.
மதுரையிலிருந்து, கீழ்குயில்குடி, முத்துப்பட்டி பெருமாள்மலை, கொங்கர்புளியங்குளம், விக்கிரமங்கலம், சித்தர்மலை, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் என வழியெங்கும் வரலாற்றுச்சான்றுகள் காணப்படும் பெருவழியொன்று மதுரையில் துவங்கி கம்பம் பள்ளத்தாக்கு வரை அமைந்திருந்ததை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார். மேலும் கம்பம் பகுதியில் அகஸ்டஸ் சீசர் காலத்தைய ரோமானிய வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்துள்ளதாகவும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இது குற்றாலம், தென்காசி, செங்கோட்டைக் கணவாய் வழியாக மேற்குக் கடற்கரையை அடைய உதவிய வணிகப் பெருவழியாகும்.
புதுச்சேரி அருகிலுள்ள அரிக்கமேடு, இராமநாதபுரத்தின் அழகன்குளம் ஆகிய கடற்கரையோரப் பட்டினங்களும் அகழாய்வில் கிடைத்த தடயங்கள் மூலம் வணிகத்தில் பங்குபெற்ற இடங்களாகத் தெரியவருகின்றன. இந்த வணிகப் பெருவழிகள் வழியாக இந்தியாவின் மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, பருத்தி ஆடைகள், முத்துக்கள், தந்தம், சந்தனம், விலையுயர்ந்த மணிகள், மரகதக் கற்கள் போன்றவை கிரேக்கம், ரோம் ஆகிய நாடுகளுக்குக் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டதும், அவர்களிடம் இருந்து பொன்னும், வெள்ளியும், மதுவும் இறக்குமதி செய்யப்பட்டதைக் காட்டும் வகையில் அந்நாடுகளின் நாணயங்களும் அகழாய்வுகளில் கிடைத்து வருகின்றன.”தி பெரிப்லஸ் ஆஃப் தி எரித்ரயென் சீ ” (Periplus of the Erythraean Sea) என்ற கி.பி 70 கால வாக்கில் எழுதப்பட்ட கிரேக்க பயண நூலொன்றும் யவனர்கள் இந்தியாவுடன் வணிகம் செய்தபாதையையும், துறைமுகங்களையும், வர்த்தகப் பொருட்களையும், இவை சார்ந்த செய்திகளையும் விவரிக்கிறது.

இலக்கியச் சான்றுகள்:
2-  Highways sangam period

காங்கேயத்தில் இருந்து பழநிவழியாக மதுரை செல்லும் வணிகப் பெருவழி பற்றிய சான்றை பேராசிரியர் ப. பாண்டியராஜா அவர்கள் அகநானூற்றுப் பாடலில் இருந்து எடுத்துக் காட்டுகிறார்.பழநி வழியே செல்லும் நெடுவழியில்  வணிகர்களைக் கொள்ளையடிக்கவரும் மழவர்களை நெடுவேள் ஆவி விரட்டியடித்தான் என்பது,
“வண்டு படத் ததைந்த கண்ணி ஒண் கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நல் போர் நெடு வேள் ஆவி
அறு கோட்டு யானைப் பொதினி ஆங்கண் …”
(அகநானூறு – 1, மாமூலனார்)

என்ற இப்பாடலில் காணப்படுகிறது என்றும், பொதினி என்பது இன்றைய பழனி அருகில் உள்ள பொருந்தல் என்பதும் (பொருந்தல் என்ற இடத்தில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் அது வணிகப் பெருநகராக  இருந்திருக்கக்கூடிய  சான்றுகள் அகழ்வாய்வு மூலம் கிடைத்துள்ளன என்பதும்) அவர் கூறும் தகவல்.
அவ்வாறே, அகநானூறு 25 ஆம் பாடலில் பொருளீட்டும் பொருட்டு தலைவன் செல்லும் வழியைக் குறிப்பிடும் பொழுது அவன் பொதிகை மலைத் தலைவன் திதியன் ஆளும் பகுதி வழி செல்வதை சுட்டிக் காட்டுகிறார்.
“… பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
பொதியின் செல்வன் பொலம் தேர்த் திதியன்
இன் இசை இயத்தின் கறங்கும்
கல் மிசை அருவிய காடு இறந்தோரே”
(அகநானூறு – 25, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்)

குற்றால அருவிகள் பொதிகை மலையில் இருக்கின்றன. எனவே, தலைவன் செல்லும் அவ்வழியில் இசைக்கருவிகள் தரும் இசைபோன்ற ஒலியுடன் வீழும் “கல்மிசை அருவியை” குற்றால அருவியாக இருக்கலாம் என்றும், தலைவன் ஆரியங்காவு – செங்கோட்டைக் கணவாய் வழி செல்லும் வணிகப் பெருவழியில் பயணம் செல்கிறான் எனக் கருதலாம் என்றும் கூறுகிறார்.
மேலும், அகநானூறு – 47 ஆம் பாடலில் பொருளீட்டச் செல்லும் தலைவன் பயணிக்கும் வழியை, பாடல் காட்டும் சுற்றுச்சூழல் குறிப்புகளான,
“…ஒலி தலை
அலங்கு கழை நரலத் தாக்கி விலங்கு எழுந்து
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம் முனை அரும் சுரம் நீந்திக் கைம்மிக்கு
(அகநானூறு – 47, ஆலம்பேரிச் சாத்தனார்)

ஆகியவற்றின் அடிப்படையில் தலைவன் செழித்துவளர்ந்த மூங்கில் காடுகளின் நடுவே சென்றிருக்கிறான் என்பது மேற்குமலைத் தொடரைக் குறிக்கும் என்றும் எனவே தலைவன் செல்லும் வழியும் செங்கோட்டை கணவாய் வழியாகச் செல்லும் வணிகப் பெருவழியாக இருக்கக்கூடும் என்று கருதுகிறார் பேராசிரியர் ப. பாண்டியராஜா.

வாணிகச் சாத்தும் அய்யனாரும்:
பண்டைத் தமிழகம் வணிகம் – நகரங்கள் மற்றும் பண்பாடு என்ற நூலில் “மயிலை, சீனி. வேங்கடசாமி” அவர்கள், கடைச் சங்க காலத்தில் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையில்) ‘சங்க காலத் தமிழர் வாணிகம்’ என்பதை ஆராய்ந்து, பண்டையத் தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றி விளக்குவார். அதில், சிலப்பதிகார நாயகன் கோவலனின் தந்தை ‘மாசாத்துவன்’ என்பவரையும், கோவலனின் மனைவியான கண்ணகியின் தந்தை ‘மாநாய்கன்’ என்பவரையும் குறிப்பிட்டு அவர்களின் பெயர்களுக்கு விளக்கமும் அளித்திருப்பார்.
கோவலனுடைய தந்தை ஒரு பெரிய மாசாத்துவன் (சாத்து – வாணிகச் சாத்து, வாணிகக் குழு, தரை வாணிகக் குழுவுக்குச் சாத்து என்பது பெயர். சாத்து வாணிகன் ஆகையால் மாசாத்துவன் எனப்பட்டான்). அது போன்றே, பல கப்பல்களையுடைய பெரிய கடல் வாணிகருக்கு மாநாவிகர் என்று பெயர் கூறப்பட்டது (நாவிகர் – கப்பலையுடையவர். நாவாய் – கப்பல்). மாநாவிகர் என்னும் சொல் திரிந்து மாநாய்கர் என்று வழங்கப்பட்டது. ஆகையால், கண்ணகியின் தந்தை ஒரு மாநாவிகன் (மாநாய்கன்) எனக் குறிப்பிட்டு, வணிகர்களான மாசாத்துவனும், மாநாய்கனும் அவ்வாறு அழைக்கப்பட்ட காரணத்தையும் சீனி. வேங்கடசாமி விளக்குவார்.


திருப்பூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் கொடுவாயில் உள்ள நாகீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்துகளுடன் கூடிய 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அய்யனார் சிற்பம் ஒன்று சென்ற ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 2, 2015 நாளிதழ் செய்தி) “திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல், வரலாற்று ஆய்வு மையத்தின்” தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொழுதும் இதே செய்தி மீண்டும் குறிப்பிடப்பட்டது. தொல்லியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் ரவிக்குமார் அவர்கள், “பண்டைய காலத்தில் தரை வழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தவர்கள் சாத்துவர் என்றும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தவர்கள் நாயகர் என்றும் அழைக்கப்பட்டனர். பண்டைய காலத்தில் வணிகம் செய்த வணிகர்கள் தங்களின் காவல் தெய்வமாக அய்யனாரை வழிபட்டனர். அவ்வணிகர்கள் தாங்கள் பயணம் செய்யும் பெரு வழிகளில் அய்யனார் சிலைகளை அமைத்து வழிபட்டு வந்தனர். அந்த வகையில் தமிழகத்தின் பண்டைய பெருவழிகளில் முக்கியமானது முசிறியில் இருந்து சோழர் துறைமுகத் தலைநகரான பூம்புகார் வரை செல்லும் வழியாகும். அதாவது அந்தப் பெருவழி பேரூர், வெள்ளலூர், சூலூர், பல்லடம், காங்கயம், கரூர், உறையூர் வழியாகப் பூம்புகார் வரை இராசகேசரிப் பெருவழி என்று அழைக்கப்பட்டது. இந்த வழித் தடத்தில் கொடுவாயில் உள்ள நாகீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்துகளுடன் கூடிய அய்யனார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

வரைபடத்தில் புவியிடக் குறியீடுகள்:
இச்செய்தியில் காணும் தகவல்படி தமிழகத்தில் சாத்தன் மற்றும் அய்யனார் ஆகியவற்றின் தொடர்பு எவ்வாறு அமைந்திருக்கக் கூடும் என்பதை அறியும் பொருட்டு மேற்கொண்ட ஒரு முயற்சியே இக்கட்டுரை. பண்டைய அய்யனார் சிலைகளின் இருப்பிடங்களும், சாத்தன் என்ற பெயரில் தொடங்கும் ஊர்களும் தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் காணப்படக்கூடும் என்ற தேடல் துவங்கியது.
1. செய்தித்தாள்களில் கிடைத்த “பண்டைய அய்யனார்” சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடங்களின் குறிப்புகள் சேகரிக்கப்பட்டன.
2. ‘சாத்தன்’ என்ற பெயர் இடம்பெற்ற ஊர்களின் இருப்பிடங்களைச் சேகரிக்க இந்திய “அஞ்சலக எண்” (Pincode) தரவுகள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான தளத்தில் இருந்து பெறப்பட்டன. Pincode Search – All India Pincode Directory என்ற தளத்தில் (http://www.indiapost.gov.in/PincodeSearch.aspx) இருந்து ஊர்களின் பெயர்களும் அவற்றின் அஞ்சலக எண்களும் சேகரிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டன.
இப்பட்டியலில் உள்ள ஊர்களில் ‘சாத்தன்’ என்ற பெயருடன் தொடர்புடையவைதான் என்று உறுதியாகத் தெரிந்த ஊர்கள் மட்டும் (சாத்தனூர், சாத்தமங்கலம், சாத்தன்குளம் போன்றவை) தேர்ந்தெடுக்கப்பட்டன. முழுப்பட்டியலும் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி சிரீதரன் அவர்களால் பார்வையிடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட ஊர்கள் ‘சாத்தன்’ என்ற சொல்லுடன் தொடர்புடையவைதான் என உறுதியளிக்கப்பட்டது. அய்யனார் சிலைகள் கிடைத்த இடங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. சாத்தன் என்ற பெயருடன் 44 இடங்களும் கிடைத்தன.
1. இந்த இடங்கள் யாவும் ‘கூகுள் மேப்’ (Google Map) வரைபடத் தளத்தில் குறிக்கப்பட்டன. அதனால், அஞ்சலக எண் தரவுகளில் இடம்பெறாத சாத்தன் என்ற ஊர்கள் இடம் பெற வாய்ப்பிருக்கவில்லை
2. இருப்பினும், கூகுள் வரைபடத்தில் இடங்களைக் குறிக்கும்பொழுது மேலும் ‘சாத்தன்’ என்ற பெயருடன் அகப்பட்ட மற்றும் சில ஊர்களும் குறிக்கப்பட்டன
3. கூகுள் வரைபடத்தில் வணிகப் பெருவழிகள் என தொல்லியல் அறிஞர் ஆர். நாகசாமி அவர்களும், பேராசிரியர் ப. பாண்டியராஜா அவர்களும்
(a.) குறிப்பிட்ட இடங்களும், (b.) வணிகவழித் தடங்களும், (c.) அந்த வரைபடங்களில் கொடுக்கப்பட்ட சில முக்கியமான வணிக ஊர்களும், கணவாய்களும் (சிவப்பு நட்சத்திரங்கள்), துறைமுகங்களும் (பச்சை வட்டங்கள்), அகழாய்வில் வணிக ஊராக அடையாளம் காணப்பட்ட இடங்களும் அடிப்படைக் குறிப்புகளாகக் (basic reference points) குறிக்கப்பட்டன
இடங்களும் தடங்களும் குறிக்கப்பட்ட பிறகு கூகுள் வரைபடம் வழி அறிந்து கொண்டவை:
[ஊர்களின் பட்டியலையும், கூகுள் வரைபடத்தையும் பார்வையிடத் தேவையான சுட்டிகள் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன]
4- Modernday Trade Routes Tamil Nadu
1. சாத்தன் என்ற பெயர் தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரியது. தற்கால ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் ஓரிரு ஊர்கள் அப்பெயரில் இருந்தாலும், சாத்தன் என்பது தமிழ் நாட்டிற்கே உரியது (புத்தரைக் குறிக்கும் ‘சாஸ்தா’ என்பது தமிழில் ‘சாத்தன்’ என வழங்கப்பட்டு பின்னர் புத்தமதத் தொடர்பை அச்சொல் இழந்துவிட்டது என்றும், அக்காலத்தின் பெளத்த சாஸ்தாவின் வழிபாட்டுத் தலங்கள் யாவும் பிற்காலத்தில், ‘தருமராசா கோயில்’, ‘சாத்தனார் கோயில்’, ‘முனீஸ்வரர் கோயில்’ என்று மாறிவிட்டன என்பதும்   மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் கருத்து. கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்று சங்க நூல்களினின்றும் தெரியவருவதாகவும் மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார், அதற்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றையும் சான்றுகளாகக் காட்டுகிறார்)
2. மத்திய அரசு வழங்கும் ‘அஞ்சலக எண் தரவுகளில்’ இன்றைய கேரளா பகுதியில் ‘சாத்தன்’ என்ற பெயரில் எந்த ஊரும் கிடைக்கவில்லை. வடமாநிலங்களில் கிடைக்கும் சில ஊர்களின் பெயர்களில் தற்செயலான ஒலிப்பு ஒற்றுமை மட்டுமே இருக்கலாம் என்று அந்த ஊர்கள் வரைபடத்தில் குறிக்கப்படவில்லை (தவிர்க்கப்பட்ட அந்த ஊர்களின் பெயர்களும், அவற்றின் அஞ்சலக எண்களுடன் பட்டியலில் பார்வைக்குக் கிடைக்கும்)
3. இவ்வாறு குறிக்கப்பட்ட இடங்கள் யாவும் பெரும்பாலும் ஆற்றங்கரைகளின் அருகாமையில் அமைந்துள்ளன.
4. அத்துடன், பண்டைய வணிகப் பெருவழிகளாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் குறித்த தடங்களின் வழியிலேயும் அமைந்துள்ளதும் தெரிய வருகிறது.
5. குறிக்கப்பட்ட இடங்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தி வரையப்பட்ட கோடுகள், இக்கால தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளின் வழியிலும் அமைந்திருப்பதாகவே தெரிகிறது.

வரைபடத்தில் இடங்களைக் குறிப்பதன் மூலம் (Geospatial data – relating to or denoting data that is associated with a particular location) ஒரு செய்தியைப் பற்றிய புதியக் கோணம் கிடைக்க வாய்ப்புள்ளது. புவியிடக் குறியீடுகள் மூலம் நம் கவனத்திற்கு வந்திராத சில முக்கியத் தகவலும் பார்வைக்குக் கிடைக்கும். இவ்வாறு அறியும் முறை 1854 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் காலரா நோய் பரவிய பொழுது, நோய் பரவிய இடங்களை வரைபடத்தில் (epidemic on maps) குறிக்கும் பொழுது அறியப்பட்டது. ஜான் ஸ்னோ (Dr. John Snow) என்ற மருத்துவரே நோயறியும் வரைபட முறையை முதன் முதலில் மருத்துவத் துறைக்கு அறிமுகப்படுத்தியவர். காலரா நோயாளிகளின் இருப்பிடத்தை லண்டன் மாநகர் வரைபடத்தில் குறிக்கத் தொடங்கிய பொழுது நோய் அதிகம் பரவிய இடம் ஒரு குறிப்பிட்ட குடிநீர்க் குழாய் வழித்தடத்தில் இருப்பதும், குடிநீர் வழி நோய் பரவுவதும் தெரிய வந்து அதற்கு மாற்று வழி கண்டவுடன் நோய் பரவுவது தடுக்கப்பட்டது.
எனவே, அது போலவே தமிழக வரைபடத்தில் ‘சாத்தன்’ என்ற ஊர்கள் அமைந்துள்ள இடங்கள், வணிகப் பெருவழிகளில் அமைந்திருந்த இடத்தைக் குறிப்பால் உணர்த்துகின்றனவா? பயணத்தின் பொழுது வணிகர்கள் அவ்வூர்களைத் தங்குமிடங்களாகப் பயன்படுத்த, அவர்களின் தேவைக்கேற்ப தக்க வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தனவா? அல்லது இந்த அமைவிட அமைப்பு தற்செயலாக அமைந்துவிட்ட ஒரு ஒற்றுமையா? என்பதை மேலும் பல வரலாற்று ஆய்வுகளும் தடயங்களும் இனி வரும் காலத்தில் காட்டக் கூடும். இக்கேள்விகளுக்கு எதிர்காலத்தில் பதில் கிடைக்கக்கூடும்.


______________________________________________________________________
Access to provided information:
Pincode Search - All India Pincode Directory
http://www.indiapost.gov.in/PincodeSearch.aspx

Data:
https://docs.google.com/spreadsheets/d/1Uh9Wf8l7xlg6Aii1-PZdBOIzar6C286NedegalRrBP8/edit?usp=sharing

Map:
https://drive.google.com/open?id=1_-IcmZ8k9MAJL26oBqLo2HSzdk4&usp=sharing
______________________________________________________________________


References:
[1]
Of commerce and Cupid
Dr. R. Nagaswamy
[Dr. R. Nagaswamy, then Director, Tamil Nadu State Department of Archaeology]
January 18, 2013, The Hindu
http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/of-commerce-and-cupid/article4315984.ece
Map:  http://www.thehindu.com/multimedia/dynamic/01333/18FR_VELLALUR_eps_1333230g.jpg

[2]
Digging up the past
T.S. Subramanian
Volume 29 - Issue 15: Jul. 28-Aug. 10, 2012, Frontline
http://www.frontline.in/static/html/fl2915/stories/20120810291507000.htm

[3]
Akananuru - Song 1, 25 & Song 47
Dr. P.Pandiyaraja
http://sangacholai.in/akam01.html
http://sangacholai.in/akam25.html
http://sangacholai.in/akam47.html
Map:  http://sangacholai.in/akam01-3.jpg

[4]
Travelling down the ages
Shankar Vanavarayar
Dec 03, 2005, The Hindu
http://www.thehindu.com/mp/2005/12/03/stories/2005120302860200.htm

[5]
Aiyanar sculpture with Vattezhuthu inscriptions found near Koduvai
http://www.thehindu.com/news/national/tamil-nadu/aiyanar-sculpture-with-vattezhuthu-inscriptions-found-near-koduvai/article7935070.ece
8ம் நூற்றாண்டு அய்யனார் சிலை:திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு
http://www.dinamalar.com/news_detail.asp?id=1400770
http://www.dinamani.com/edition_coimbatore/tirupur/2015/12/02/1200-ஆண்டுகள்-பழைமையான-அய்யனார/article3157265.ece

[6]
பண்டைத் தமிழகம்: வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு, வீ. அரசு
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்
http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=296&pno=81

[7]
பௌத்தமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி
http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=13

[8]
வரலாற்றுக்காலம் - 1. கொடுமணலும் மரக்காணமும்
ச. செல்வராஜ், தொல்லியல் துறை, மண்டல உதவி இயக்குநர், பணி ஓய்வு
http://www.dinamani.com/tholliyalmani/pudhaiyunda-thamizhagam/2016/01/22/வரலாற்றுக்-காலம்---1.-கொடுமணலு/article3238036.ece

[9]
பெருவழி பற்றிய குறிப்பு - தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்
https://maduraivaasagan.wordpress.com/page/12/ (http://sangacholai.in/akam47.html)

[10]
இராசகேசரிப்பெருவழி, கொங்கு கல்வெட்டு ஆய்வு, து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,கோவை.
http://kongukalvettuaayvu.blogspot.com/2015/06/rajakesari-highway.html
Tale of an ancient road, The Hindu, June 30, 2007,  http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tale-of-an-ancient-road/article1863938.ece

[11]
பழைய காலத்தின் இரு பெருங் கிணறுகள், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழ்ப் பொழில்  (1932-1933) துணர்: 8  -  மலர்: 10, பக்கம் 386.
http://www.subaonline.net/TPozhil/THF_Tamil_Pozhil_Periodical_Vol.08_1932-1933_10.pdf
 



Additional Readings:
[1]
Book Review: Merchants of Tamilakam
BY Sarath Ramakrishnan, November 25, 2013

The Merchants of Tamilakam: Pioneers of International Trade
by Kanakalatha Mukund
http://centreright.in/2013/11/book-review-merchants-of-tamilakam/#.Vzfa1VQrLIU

[2]
Trade through the Palghat gap
http://historicalleys.blogspot.com/2009/06/trade-through-palghat-gap.html

[3]
Use of GIS Mapping as a Public Health Tool—From Cholera to Cancer
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4089751/

படம் உதவி:
து. சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,கோவை.
தென்கொங்கு சதாசிவம்.சு, 'வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம்'


நன்றி - சிறகு இதழ்:http://siragu.com/?p=20582 


______________________________________________________________________

தேமொழி
themozhi@yahoo.com
______________________________________________________________________

No comments:

Post a Comment