Sunday, June 19, 2016

திருக்குறள் மாநாடு - ஜெர்ம்னி டோர்ட்முன்ட் பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்

--  முனைவர் சுபாஷிணி


இந்த ஆண்டில் ஜெர்மனியில் நடைபெற்ற இரண்டாவது திருக்குறள் நிகழ்வு நடைபெற்று முடிந்துள்ளது. ஐரோப்பாவில் பொதுவாகவே ஆடல் பாடல், திரைப்பட கலை நிகழ்ச்சிகள், அவ்வப்போது சில புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் என்று மட்டுமே தமிழர் நிகழ்வுகளைப் பற்றி என் காதுகளுக்கு எட்டும் செய்திகளை அறிந்திருந்த எனக்கு இது மனதிற்கு நிறைவளிக்கும் ஒரு வளர்ச்சியாகத் தென்படுகின்றது.

டோர்ட்முண்ட் பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் திருக்குறள் ஆய்வு மாநாடு நேற்று டோர்ட்முண்ட் நகரில் நடைபெற்றது. உள்ளூர் பேச்சாளர்களும் இலங்கை வன்னியிலிருந்து ஐந்து பேச்சாளர்களும் கலந்து கொண்ட நிகழ்வு இது. இடையே தேநீர், மதிய உணவு, ஓரிரு நடனங்கள் என நிகழ்ச்சி தொய்வில்லாமல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பாராட்டத்தக்க அம்சங்கள் சிலவற்றை குறிப்பிடத்தான் வேண்டும். குறிப்பாக நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்ட ஏறக்குறைய அனைவருமே, நிகழ்ச்சியில் ஒவ்வொரு சொற்பொழிவையும் மிகக் கவனத்துடன் ஆழ்ந்து உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டும் குறிப்புக்களை எடுத்துக் கொண்டும் இருந்தனர். ஒவ்வொரு ஆய்வுரைக்குப் பின்னரும் அரங்கில் இருந்தோர் கேள்விகளைக் கேட்டும் தங்கள் கருத்துக்களைப் பதிந்தும் ஆர்வத்துடன் கலந்து கொண்டது அவர்களுக்கு நிகழ்வின் மேல் இருந்த ஆர்வத்தைக் காட்டியது.

புலம்பெயர்ந்த நாடுகளில் இவ்வகை நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பங்களிப்புச் செய்கின்றனர். சிலர் தேநீர் தயாரித்தும் சிலர் உணவுப்பொருட்களைத் தயாரித்தும் கொண்டு வந்து தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

எனது உரையின் மையக் கருத்தாக நான் திருக்குறளின் வரலாறு, அது எழுந்த காலகட்டம், திருக்குறள் - திருவள்ளுவர் என்னும் விசயத்தைச் சுற்றி வலம் வரும் கருத்துக்களான அவரது பிறப்பு சமயம், குலம், தொழில் மனைவி, உருவம் என்பன போன்ற விசயங்களில் ஆய்வுகளைச் செய்வதை விடுத்து திருக்குறளின் சாரங்களைக் காலத்தின் தேவைக்கேற்ப ஆராய வேண்டியதன் அவசியத்தையும், திருக்குறள் வேற்று மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட காலம், மொழிபெயர்ப்பு தொடர்பான முயற்சிகள், மொழிபெயர்ப்பு செய்தோர் பற்றிய தகவல்கள் ஆகியனவற்றோடு இன்றைய காலகட்டத்தில் திருக்குறளுக்கு ஒரு தகுந்த டோய்ச் மொழிபெயர்ப்பு தேவைப்படுவதன் அவசியத்தையும் எனது உரையில் வழங்கினேன்.

அரங்கில் வந்திருந்த பெரும்பாலோர் நான் முன்வைத்த கருத்துக்களை வரவேற்றமையும் இது போன்ற சிந்தனை மீண்டும் பரவலாக பேசப்படவேண்டும் என்றும் கூறியமையும், ஆக்ககரமான பணியில் இந்தப் பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியமும் அதன் உறுப்பினர்களும் ஆர்வம் கொண்டிருப்பதை நன்கு உணர்த்தியது.

நிகழ்ச்சியில் இறுதியில் பேசிய முன்னாள் இலங்கை கல்லூரி முதல்வர் ஒருவர் (பெயர் நினைவுக்கு வரவில்லை) மிக அருமையான ஒரு கருத்தினைக் குறிப்பிட்டுப் பேசினார். திருக்குறள் எழுந்த காலத்தில் தமிழக நிலம் என்பது பல போர்களைச் சந்தித்து வந்த காலகட்டம். மக்களிடையே அறம் என்பந்து மலிந்து போயிருந்த காலகட்டம். அவ்வகைச் சூழலில் எழுந்த திருக்குறள் மக்கள் மத்தியில் அறத்தை நிலைநாட்டும் கருத்துக்களை முன் வைத்தது. அதற்குத் தேவையும் இருந்தது, அதே போன்ற ஒரு சூழலை இன்றும் காண்கின்றோம். போருக்குப் பின்னான இலங்கையின் இன்றைய நிலையில் திருக்குறள் சொல்லும் அறக்கோட்பாடுகளின் தேவை மிக முக்கியமான ஒன்றாகவே கருதப்பட வேண்டியது, என அவர் குறிப்பிட்டுப் பேசியதை நானும் வரவேற்கின்றேன்.

ஐரோப்பாவில் ஜெர்மனியைப் பொருத்தவரை ஆங்காங்கே பல தமிழ் அமைப்புக்கள் இருக்கின்றன. ஆயினும் அனைத்தையும் ஒருங்கிணைத்து அரவணைத்துச் செயல்படும் தாய்போன்ற ஒரு அமைப்பு ஒன்று நிச்சயமாகத் தேவை. அதிலும் டோர்ட்முண்ட் நகரம் அமைந்திருக்கும் பகுதி தமிழர்கள் நிறைந்த ஒரு பகுதியாக, அதாவது பாரிசின் லா சாப்பல் பகுதி போல இருக்கும் ஒரு பகுதி. ஆக ஜெர்மனி முழுமைக்கான தமிழர் அமைப்புக்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் ஒரு அமைப்பாக இந்தப் பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் தன்னை வளர்த்துக் கொள்வது பயனளிக்கும் என்று கருதுகின்றேன். இதனை நோக்கமாகக் கொண்டு இந்த நிர்வாகச் சபையினர் செயல்பட்டு ஜெர்மனியில் தமிழ் ஆய்வுத் துறையிலும் தமிழ் வரலாற்றுத் துறையிலும் ஆர்வம் உள்ள இளைய சமுதாயத்தினரை வளர்க்க வேண்டியது ஒரு முக்கியப் பணி என்றும் கருதுகின்றேன். இந்த நோக்கத்தோடு இந்த ஒன்றியம் இயங்கும் போது எமது தமிழ் மரபு அறக்கட்டளையும் எம்மால் முடிந்த வகையில் இந்த அமைப்பிற்கு உதவுவோம் என்ற தகவலையும் குறிப்பிட விரும்புகின்றேன்.




















பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் செயல்பாடுகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள்!

முனைவர் சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளை





___________________________________________________________
  

முனைவர். சுபாஷிணி
ksubashini@gmail.com
___________________________________________________________

No comments:

Post a Comment