Friday, August 5, 2016

கருப்பும் கறுப்பும்!


-- நூ.த.லோக சுந்தரம்


எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் 18 கீழ்க்கணக்கு எனவரும் சங்கநூல்களில் (8=10=18) வல்லின உகர 'றகரம்' வரும் "கறுப்பு" எனும் சொல்லிற்கு  இருபொருள்கள் காணப்படுகின்றன. 

(1) கார் = கரிய நிறம்
(2) சினம்   கோபம் கொள்ளும் மனநிலை

சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்                 
கருங்கால் வரகின் இருங்குரல் புலர   [மதுரைக் காஞ்சி - 272]   
/= நிறம்/
(கவ்வை-எள்ளின் இளங்காய் = நிகண்டு)
("கருங்கால் வரகின்" என்பதில் கரியநிறமும்  காணலாம்)
                                                                                        
வானமாமலை வாய்சூழ்பு கறுப்பக் கானங்                                                                               
கல்லென் றிரட்டப் புள்ளின மொலிப்ப  [குறிஞ்சிப்பாட்டு - 227]
/= நிறம்/               

தொன்றுகறுத் துறையுந் துப்புத்தர வந்த                       
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்    [மதுரைக் காஞ்சி - 347]
/=சினம் /

கறுவுகொள் நெஞ்சமொடு
களம்வேட் டன்றேஒருமுகம்   [திருமுருகாற்றுப்படை - 100]
/=சினம் /                        

செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர்  [அகநானுறு - 81]
/=சினம் /               

உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர் [அகநானுறு - 111]
/=சினம் /            

நம் உயர்வு உள்ளினர் காதலர்  கறுத்தோர் [அகநானுறு - 187]
/=சினம் /

அரும்பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர் [அகநானுறு - 389]
/=சினம் /           

அவல நெஞ்சமொடு செல்வல்: நிற் கறுத்தோர் [புறநானூறு - 210]
/=சினம் /     

கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து
வாலிதின் விளைந்த புது வரகு அரியத்
தினை கொய்யக் கவ்வை கறுப்ப அவரைக்           
கொழுங்கொடி விளர்க் காய் கோட்பதம்ஆக  [புறநானூறு - 220] 
/= நிறம்/                     
(கவ்வை-எள்ளின் இளங்காய்)

கல் உறின், அவ்வடி கறுக்குந அல்லவோ [கலித்தொகை - 13]
/= நிறம்/               

கறுவுகொண்டுஅதன்முதல்குத்தியமதயானை [கலித்தொகை - 36] 
/=சினம் /      

முரு(கு)உடன்று கறுத்த கலிஅழி மூதூர்  [பதிற்றுப்பத்து - 26]
/ = நிறம்/               

கறுத்த தெவ்வர் கடிமுனை அலற [பதிற்றுப்பத்து - 39]
/=சினம் /                             

ஆர்பதம் நல்கும் என்ப கறுத்தோர்
உறுமுரண் தாங்கிய தார்அரும் தகைப்பின் [பதிற்றுப்பத்து - 66]
/=சினம் /           

காவல் எதிரார் கறுத்தோர் நாடுநின்  [பதிற்றுப்பத்து - 72]
/=சினம் /                         

மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர் [ஐங்குறுநூறு - 474] 
/=சினம் /              

கற்றாற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார்   
சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் - எற்றெனின்
தானும் நடவான் 'முடவன் பிடிப்பூணி
யானையோ டாடல் உறவு'   [பழமொழி நானூறு - 16]   
 /=சினம் /                                                

மெய்ம்மையே நின்று மிகநோக்கப் பட்டவர்
கைம்மேலே நின்று கறுப்பன செய்தொழுகிப்    
பொய்ம்மேலே கொண்டவ் விறைவற்கொன் றார் 'குறைப்பர்
தம்மேலே வீழப் பனை [பழமொழி நானூறு - 280]  
/=சினம் /                                                     

கறுத்து இன்னா செய்தஅக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்  [குறள் - 312]
/=சினம் /                          

கால்தூய்மை யில்லாக் கலிமாவும் காழ்கடிந்துறுத்து
மேல்தூய்மை யில்லாத வெங்களிறும் - சீறிக்
கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்  [திரிகடுகம் - 46]
/=சினம் /                                          

ஒருத்தியான் ஒன்றல பல்பகை என்னை
விருத்தியாக் கொண்டன வேறாப் - பொருத்தில்
மடல்அன்றில் மாலை படுவசி ஆம்பல்
கடலன்றிக் காரூர் கறுத்து   [திணைமாலை  நூற்றைம்பது - 120]
/= நிறம்/                                      
                                                                                                     
இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால்
கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே
'சிறுகுரங்கின் கையால் துழா' [பழமொழி - 400]                                     
/= ????/

கறுத்த பகைமுனையும் கள்ளாட்டுக் கண்ணும் [ஆசாரக்கோவை - 55]
/=சினம் /

ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து [நாலடியார் - 62]
 /=சினம் /                         

பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால்
கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல சுனைத்து  [நாலடியார் - 334]                           
/=சினம் / 

வெள்ளி விழுந்தொடி மென்கருப்பு உலக்கை [அகநானுறு -  286] 
/= ????/

என ஒரே ஒரு இடம் தவிர  'கருப்பு' எனும் சொல் வேறெங்கும் காணவில்லை.
இதனில் கருப்பின்னுக்கு  மென் எனும்  பண்பு முன்னொட்டு சேர்ந்துள்ளதால் சுவடி பாடமே  சரிதானா என பெரியதொரு  ஐயமும் எழுகின்றது. 

அதான்று; 
'கரு' எனும் உரி வரும் பற்பல இடங்களில் 'சினை' எனும் பொருளில்  '6' வரிகளில்  கருப்பை எனும் பொருளில்தான் காண்கின்றன

ஆனால்;
கருப்பு வில்லி  என காமனைக் குறிக்கும் சொல் உள்ளது;   அதாவது கரும்பினை   வில்லாக ஏந்தியவன் எனும் பொருளில்

கருப்பு எனும் சொல் நாம் இப்போது   கரும்பு எனும் பயிரினமாவதை வருவதை  ஆயிரம் ஆயிரம் எடுத்துக்காட்டுகளால்  காட்டலாம்

வெளுத்த நிறத்தில் கரும்பு வளர்ந்தாலும் பெரும்பாலும் கரிய நிறத்தில்தான் காணலாம் அல்லவா?
எனவே கரியநிறத்துக்கும் கரும்பிற்கும் தொடர்பு முற்றிலும் இருக்கின்றது.

தேவாரம் போன்ற 7-10 நூற்றாண்டு நூல்களில்
'கண்டங்கறுத்தான் கறுப்புஅழ காய்உடையான்' என  சிவபெருமான் கழுத்து கறுத்தது ( கரிய நிறம் ) எ ன வல்லின உகரம் ஏறிய றகரத்தால் எழுதி உள்ளமைக் காணலாம்.

ஆனால்;  திருமாலின் நிறம் 'கரி'யது என வரும் போது  'கரு' என இடையின ரகரம் மட்டும்தான் காணலாம். 

கரிய நிற யானையைக்குறிக்க இடையின ரகரம்தான் வரும் அல்லவா!!
எனவே; கரிய நிறம் தனக்கு ரகரம் றகரம் என இரண்டும் போலியாவது நீண்டநாள்  பயன்பாடாகின்றது எனலாம்.




________________________________________________________ 








நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
________________________________________________________  







No comments:

Post a Comment