Saturday, March 4, 2017

தேன்கனிக்கோட்டை சோழர் கால சுவர்க்க கல்வெட்டு தரும் செய்தி

--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.



தினகரன் நாளிதழ் (27.02.17)  செய்தி 
நன்றி தினகரன்:http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=283073

தேன்கனிக்கோட்டை அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

தேன்கனிக்கோட்டை: வரலாற்று ஆய்வாளர்அறம் கிருஷ்ணன் தலைமையில் பிரியன், மஞ்சுநாத், கிருஷ்ணமூர்த்தி, சிவா, முனேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் கள ஆய்வில் இந்த கல்வெட்டு மற்றும் நடுகல் தொகுப்பை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து அறம் கிருஷ்ணன் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே 15 கி.மீ. தொலைவில் உள்ளது சாலிவாரம் கிராமத்தில் 13ம் நூற்றாண்டு சேர்ந்த சோழர் காலத்து தமிழ் கல்வெட்டும், மிகவும் பிரம்மாண்டமாக வெறு எங்கும் காணமுடியாத அளவு மூன்று நடுகற்கல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில் உள்ள ஒன்பது வரியும் படிக்க முடியாத அளவு சேதமடைந்துள்ளது. முதல் மூன்று வரிகள் ஒய்சாளர்களின் மெய்கீர்த்தி போல் உள்ளது.

சோழர் காலத்தில் செதுக்கப்பட்ட ஒய்சாளர்கள் கல்வெட்டு என்பதை மட்டும் அறிய முடிகிறது. ராஜராஜன் காலத்தில் தான் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தகடூர் நாட்டிற்கு முடிகொண்ட சோழ மண்டலம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரசோழ வளநாடு சோழர்களிடம் குறு நிலமன்னர்களாக இருந்து ஒய்சாள அரசர்கள் இவ்விடத்தை ஆட்சி செய்யும்போது நில தானமாக கொடுத்திருக்கலாம். முதல் நடுகல் சிறபம் குறுநில அரசனாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஐந்தடி அகலமும், பத்தடி உயரமும் கொண்டது. இருகால்களையும் மடித்து சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் வலதுகையில் வாளை கீழ்நோக்கி பிடித்தப்படி, வாளின் கூர்முனை மடித்த குதிகாலினை தொடும்படியிருக்கிறது.

இக்கற்சிலையின் வலதுபுரத்தில் ஒரு பெண்ணின் கற்சிற்பம் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. இடையிலிருந்து குதிகால்வரை வரிவரியாக ஆடை அணிந்திருப்து போல் துள்ளியமாக வடிக்கப்பட்டுள்ளது. அரசனின் மனைவியாக இருக்க வேண்டும். நடுவில் இருக்கும் கற்சிற்பத்தை சுற்றிலும் நிறைய சிற்பங்கள் உள்ளன. கீழ் பகுதியில் ஏழு பேர் வரிசையாக நின்று கொண்டு வாத்தியம் வாசிப்பது போலிருக்கிறது. இவர்களின் அருகிலேயே குதிரையுடன் ஒரு போர் வீரன் நிற்கிறான்.

இது சுவர்க்கம் வகையைச் சேர்ந்த நடுகற்களாகும், இறந்தவுடன் நேரடியாக சொர்க்கம் சென்றதாகவும், அங்கே தேவலோக பெண்கள் வரவேற்பது போலவும் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. சோழர்கள் காலத்திலிருந்து தான் இதுமாதிரியான நம்பிக்கை வளர ஆரம்பித்திருக்க வேண்டும். 2வது நடுகல் சிற்பத்தை மார்பிற்கு கீழ்பகுதி மட்டும் தான் பார்க்க முடிகிறது. மேல்பகுதி முழுவதும் மிக பெரிய பாறை கல்லால் மூடப்பட்டிருக்கிறது. சிறப்பு மிக்க சிற்பங்களும், கல்வெட்டுகளும் இருந்தும் எந்த பயனும் இல்லாமல் அனைத்தும் பாதுகாப்பின்றி ஒரு குப்பை மேடாக காட்சியளிக்கின்றது. வரலாற்றை பற்றிய விழிப்புணர்வு அனைவரிடத்திலும் வரவேண்டும். இவ்வாறு அறம் கிருஷ்ணன் தெரிவித்தார். 




***

கல்வெட்டுப் பாடம் வழங்கியவர் -
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.



கல்வெட்டுப்பாடம்:
1 ஸ்வஸ்திஸ்ரீமது மஹாமண்டலேச்வரந் த்ரிபு
2 வந மல்ல தழைக்காடு கொங்கு நங்கி
3 லி கொயாற்றூர் உச்சங்கி பாநுங்கல் கொண்
4 ட புஜபல வீர கங்கப் பொய்சள தே(வர்)
5 ப்ருத்விராஜ்யம் பண்ணிச் செல்லா நி
6 (ன்ற) த்தாக்ஷி சம்மற்சரத்து முடிகொண்ட
7 (சோ)ழ மண்டலத்து ராஜேந்த்ர சோழ வளநாட்டுச் சி..
8 நாட்டுக் கட்டுக் காமுண்டர் பனையந் (கந்நர)

குறிப்பு :  கல்வெட்டு,  ஹொய்சள அரசர்கள் காலத்தது. காரணம், கல்வெட்டில், “பொய்சள தேவர் பிருதிவிராச்சியம் பண்ணி”  என வருகிறது. முடிகொண்ட சோழ மண்டலம், முதலாம் இராசராசனின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்திய கருநாடகப்பகுதிகள் அடங்கிய நிலப்பகுதியாகும். அதன் உட்பிரிவுகளில் ஒன்றே இராசேந்திர சோழ வளநாடு.   கல்வெட்டில்,  கட்டுக் காமுண்டர் பனையன் (கன்னர) என்பவர் குறிக்கப்பெறுகிறார். முதல் நான்கு வரிகள் போசளர் மெய்க்கீர்த்திவரிகள். தழைக்காடு போசளரின் தலைநகர். கொங்கு, நங்கிலி, கொயாற்றூர், உச்சங்கி, பானுங்கல்  ஆகியன போசளரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள். வீரகங்க போசளதேவர் என்னும் அடைமொழிப்பெயர், விஷ்ணுவர்த்தனன் என்னும் பிட்டிதேவன் கல்வெட்டுகளிலும், இரண்டாம் வீர வல்லாளன் கல்வெட்டுகளிலும் 
காணப்படுகிறது. எனவே, கல்வெட்டு இவ்விருவர் காலங்களில் ஒன்றாக இருக்கலாம். விஷ்ணுவர்த்தனனின் ஆட்சிக்காலம் கி.பி. 1104-1141. இரண்டாம் வீரவல்லாளனின் ஆட்சிக்காலம் கி.பி. 1171-1219. கல்வெட்டில் தமிழ் சுழற்சியானடான ”இரத்தாக்ஷி”  ஆண்டு குறிப்பிடப் பெறுகிறது. (சம்வத்சரம் என்னும் சொல் சம்மற்சரம் என்று எழுதப்பட்டுள்ளது.) இரத்தாக்ஷி ஆண்டு 
விஷ்ணுவர்த்தனன் ஆட்சிக்காலத்தில் வருவதிலை. இரண்டாம் வீரவல்லாளனின் ஆட்சிக்காலத்தில் கி.பி. 1204-இல் இரத்தாக்ஷி ஆண்டு வருகிறது. எனவே, கல்வெட்டு, இரண்டாம் வீரவல்லாளனின் காலத்தது 
எனக் கொள்ளலாம். 
கல்வெட்டின் எழுத்து, தமிழ்.  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.



___________________________________________________________
  

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________

No comments:

Post a Comment