Thursday, March 16, 2017

விழுப்புரம் வடக்கு இரயில்வே காலனி...



--கோ.செங்குட்டுவன்

இந்தியாவில் ஐரோப்பியர்களின் மிச்ச சொச்சங்களாக இன்றும் நிலைத்திருப்பவற்றுள், அவர்களின் கட்டடங்களைச் சொல்லலாம்.

தமிழகத்தில் இரயில் பாதையின் நெடுகிலும், முக்கிய சந்திப்புகளில் இந்த மாதிரியானக் கட்டடங்கள் நூறாண்டைக் கடந்தும் நம்முன் வாழ்ந்து வருகின்றன.

அவர்கள் உருவாக்கிய இரயில்வே குடியிருப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்தவைதாம்.

உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரையிலுமாக அனைவருக்கும் குடியிருப்பு. ஒவ்வொரு நிலையினருக்கும் தனித்தனியான வடிவமைப்புகளில் வீடுகள்.

சில, ஓடுகள் மட்டும் வேயப்பட்டும், மேலும் சில ஓரடுக்கு, ஈரடுக்குடனும் காட்சியளிக்கும்.

ஆனாலும், ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் கண்டிப்பாகத் தோட்டம் உண்டு. ஒட்டுமொத்தமாக இக்குடியிருப்புகளை மரங்கள் சூழ்ந்திருக்கும்.

ஐரோப்பியர்கள் அழகியல் உணர்வுடையவர்கள் என்பதற்கு இத்தகுக் குடியிருப்புகள் சான்றுகளாகும்.

தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த இரயில்வே குடியிருப்பாக அமைந்திருப்பது, விழுப்புரத்தின் வடக்கு இரயில்வே காலனி.

ஒரு காலத்தில், சட்டைக்காரர்கள் காலனி என்றழைக்கப்பட்டப் பகுதி. அப்போதெல்லாம், விழுப்புரம் இரயில் நிலையத்தில், ஆங்கிலோ இந்தியர்கள்தான் பெருமளவில் பணியில் இருந்திருக்கின்றனர்.

அவர்கள் குடியிருந்த இந்தப் பகுதி, மக்கள் மொழியில், சட்டைக்காரர்கள் காலனி எனப்பட்டது.

பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இக்குடியிருப்பு, விழுப்புரத்தின் தனி உலகம்.

காலம் மாறியது. ரயில்வேயில் ஆங்கிலோ இந்தியர்களின் ஆதிக்கம் குறைந்தது. அவர்களின் புலம்பெயர்வுகளும் தொடங்கின.

இப்போது, விழுப்புரத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான், இந்தச் சட்டைக் காரர்கள் வசிக்கின்றனர்.

வடக்கு இரயில்வே காலனியிலும், பெரும்பாலான வீடுகள் காலியாகவே கிடக்கின்றன. இதில் மிகப்பல வீடுகள் சிதிலமடைந்து, டிமாண்டி காலனிபோல் காட்சியளித்து வருகின்றன.

இத்தகைய வீடுகளை இடித்து அகற்ற முடிவுசெய்துள்ள இரயில்வே நிர்வாகம், கடந்த சில நாள்களாக அந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

பல வீடுகள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுவிட்டன. இடிக்கப்பட்டும் வருகின்றன.


இடிக்கப்பட்ட இடங்களில் வெள்ளைக் கற்களின் குவியல். ஆம், செங்கற்கள் அப்படித்தான் காட்சியளிக்கின்றன.

கட்டடம் முழுக்க சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டுள்ளதே, இதற்குக் காரணம்.


ஐம்பது, நூறாண்டுக்கு முன்பு பலரது கனவுகளையும், கற்பனைகளையும் சுமந்து திரிந்த இந்தக் கட்டடங்கள், இன்று மண்ணோடு மண்ணாகிவிட்டன.

இதில் வாழ்ந்தவர்கள், இப்படிப் பார்க்கும்போது, அவர்களது மனசு நிச்சயம் கனத்துப் போகும்!

பழையன கழிதல் வேண்டும்தானே?

பழைய கட்டடங்கள் இடிக்கப்படும் அதே நேரம், இங்குள்ள மரங்கள்..?

இந்த மரங்களுக்கு எப்படியும் குறைந்தபட்சம் ஐம்பது வயதாவது இருக்கலாம்.

நகரமயத்திற்கு இரையாகிவிட்ட விழுப்புரத்தில், உயிர் வாழும் வனமாக இருப்பது, வடக்கு இரயில்வே காலனி மட்டும்தான்.

எத்தனை விதமான மரங்கள், அதிலிருந்து வீசும் வாசங்கள், பெயர் தெரியாத பறவைகளின் சங்கீத ஒலிகள்... இந்த மரங்கள், வனம் வாழத்தான் வேண்டும்..!

மேலும், இடிக்கப்பட உள்ள கட்டடங்கள் சிலவற்றின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இப்போது...

சில கட்டடங்களைப் பழமை மாறாமல் பாதுகாக்கலாம்.




 பழையனவற்றின் எச்சங்கள் இருக்கத்தான் வேண்டும். வருங்கால தலைமுறையின் நினைவுகளுக்காக இருக்க வேண்டும்.

ஏன், புதுவையில் இன்னும் பிரெஞ்சுப் பெயர்களில் ஆன வீதிகள், கட்டடங்கள், காவல்துறையின் சீருடைகள் இன்றளவும் நின்றுள்ளனவே?     





_____________________________________________________

கோ.செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com
_____________________________________________________

No comments:

Post a Comment