Thursday, May 25, 2017

சீனிவாசநல்லூர் குரங்கநாதர் திருக்கோயில் கல்வெட்டு


-- யுவராஜ் அமிர்தபாண்டியன்


இடைக்கால சோழர்கள் தலையெடுக்கக் காரணமானவன் பரகேசரி விசயாலய சோழன். இவனது மகன் ஆதித்த சோழன் மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான். இவனைப் போலவே இவனது மகன்  பராந்தகனும் சைவப்பணியாக கற்றளிகள் உருவாக்கியவன்.  சோழர்காலக் கோயில்களுள் ஒன்று திருக்கொருக்குத்துறை மகாதேவர் கோயில்  எனக் கல்வெட்டுக்கள் குறிக்கும் கோயில்.  தற்போது இக்கோயில் சீனிவாசநல்லூர் குரங்கநாதர் திருக்கோயில் என அழைக்கப்படுகிறது.  இக்கோயிலின் காலம்   முதலாம் பராந்தகனின் காலம் என்றும், அவனது தந்தை ஆதித்தனின் காலம் என்றும்  இரு வேறு கருத்துகள்  தொல்லியல் ஆய்வாளர்களால் முன் வைக்கப்படுகிறது.




திருச்சி சேலம் சாலையில் முசிறி தாண்டியதும் வரும் சிறிய அழகான காவேரிக்கரை கிராமம் சீனிவாசநல்லூர். முக்கிய சாலையிலிருந்து சற்று ஒதுங்கி நிற்கும் குரங்கநாதர் கோயில் பராந்தக சோழர் காலத்துக் கலைக் கருவூலம்.  இது தமிழகத்திலுள்ள சோழர்கால கோயில்களுள் சிறப்பான வேலைப்பாடுகள் அமைந்துள்ள சிறிய சோழர் கால கட்டுமானம்.

இக்கோயிலில் காணும் கல்வெட்டின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இது  பிற்கால குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டா? அல்லது பராந்தக  சோழன் காலத்துக் கல்வெட்டா என்று திரு. துரை சுந்தரம் ஐயா படித்துக்கூறினால் நலமாயிருக்கும்.
 





கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு துரை  சுந்தரம், கோவை: 

கல்வெட்டின்  பாடம் கீழ் உள்ளவாறு:

1 .....வர்ம்மற்கு யாண்டு 3 ஆவது ப்ரஹ்மதேயம் ..........
2  .......றை பெருமானடிகளுடைய இறையிலி தேவதா
3............பெருமானடிகளுக்குத் திரள் .....மேல்
4 ...........வெண்....று அரையர் ஆசாரகாந்த ப்ரஹ்மாதிராஜர்
5 ...........மங்கலத்து மூலபருடையார்க்குச் சொல்ல் இம்மூலபருடையாரும் 
6 ........பணித்து வாரிகம் வைத்து வைய்க்கப்பட்ட வாரிகரும் கணக்கு(ம்)
7..............இறையிலி தேவதானமாக நிலங்களை நிவந்தஞ்செய்தபடி 
திரு
8 ............நானாழியா.............பத்தெட்டுக்கு...........மூன்று பொன் ..க்கு
நிசதம் அரிசி 
9 நானாழியினுக்கு நிலன் ஆலஞ்செய் நான்கு மாவும் எல்லை ஒரு
மா நிலன் 
10 ........நஞ்செய் ஒரு மாவரையும் நெய்யமுது.......ஆழாக்காக நிசதம் 
11 .....காழாக்கினுக்கு நிலன் நாவற..... செய் இரண்டு மாவும் செம்புணி
12  ............மாவும் திருவாராதினை செய்யும் ப்ராஹ்மணன் ஒருவனுக்கு கணத்தார்
13  .....(நஞ்)செய் எட்டுமாவில் மேக்கடைய ... வரை முந்திரிகைய்
14 ...(கு) நிசதம் பதினெட்டுக்கு நிசதம் எண்ணை உழக்காழாக்கினுக்கு... 
15  மூன்று மாக்காணி அரைக்காணி முந்திரிகையும் அர்ச்சநாபோகம்
16 .............பணி செய்ய நிலன் செம்புணி வாரம் நான்கு மாவும் 
மருதஞ்செய் 
17 ...........மாவும் நிகளிகனொட்டைக் கூறு இரண்டு மாவில் தெற்கடைய
18  ஸ்ரீபலி எழுந்தருளும்போது பிடிவிளக்கினுக்கு எண்ணை உழக்கினுக்கு
19 .......கூறு இரண்டு மாவில் வடக்கடைய ஒரு மாவும் உவச்சு
மத்தளி மூ
20  ன்றும் கரடிகை ஒன்றும் தாளம் ஓரணையும் .....ஒன்றும் 
சேகண்டிகை ஒன்றும் 
21  ஆக எழாள் கொண்டு முட்டாமேய் கொட்ட கொடுங்கொடு 
இட்டேரிக்கு மேக்கும் ஆற்றுக்
22  குலைக்கு வடக்கும் வாத்தலைக்கு கிழக்கும் பெருவாய்க்காலுக்குத்
தெற்கும் 
23  ஆக இந்நடுவுபட்ட நிலன் உண்ணிலமொழிவின்றியும் இதனொடு
மடைந்த ..
24  ..............ஒரு மாவும் தென்னூர் மூன்று மாவும் காளம் இரண்டு ஊத 
குரங்
25  கன் வசக்கல் காலும் அரசங்கல் ஒரு மாவரையும்


குறிப்பு:
சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.

வரி 5 -    மங்கலம் என்று வரும் சொல் “மகேந்திர மங்கலம்” என்ற சொல்லின் பகுதியாக இருக்கலாம்.
மூலபருடையார் என்பார் கோயில் நிருவாக சபையினர் ஆவர். சதுர்வேதி மங்கலத்துச் சபையார், பெருங்குறி என்று அழைக்கப்பட்டதைப் போன்று சதுர்வேதிமங்கலத்துக் கோயில் சபையினர் மூலபருடையார் என அழைக்கப் பெற்றிருக்கலாம். மூலபருடை என்பது ”மூல பரிஷத்”என்னும் சமற்கிருதச் சொல்லின் தமிழ் வடிவமாகலாம். (பரிடை என்றும் திரிந்து வழங்கும்).
வரி 6 -   பணித்து - ஆணையிட்டு.  வாரிகம்=வாரியம். (குழு).வெவ்வேறு பணிகளுக்கு வெவ்வேறு வாரியங்கள் அமைக்கப்பட்டுப் பணிகள் மேற்பார்வை செய்யப்பட்டன.
வரி 12 -  திருவாராதினை=திருவாராதனை. பூசை.கணத்தார் என்பார் கிராம சபைகளில் ஒன்று.
வரி 15 - அர்ச்சநாபோகம் - கோயில் பூசைச் செலவுக்காக விடப்படும் நிலம்.
வரி 18 - ஸ்ரீபலி = விக்கிரகங்களுக்கு நாள்தோறும் வைக்கும் உணவு.  பிடி விளக்கு-பிடியை உடைய விளக்கு.
வரி 19 - உவச்சு-  கோயிலில் மத்தளம் முதலியன கொட்டும் இசைக்கலைஞர்கள் உவச்சர் என அழைக்கப்பட்டனர். அவர்தம்  பணி உவச்சுப்பணி ஆயிற்று.
வரிகள் 19,20,24 - சில இசைக்கருவிகளின் பெயர்கள் வருகின்றன. மத்தளி, கரடிகை, தாளம், சேகண்டிகை, காளம். (சேகண்டிகை இன்றும் உள்ளது. தாளம், இரு கைகளில் இரு தட்டுகள் கொண்டு ஒலிக்கப்படும் கைத்தாள்ம். இன்றும் உள்ளது. ஓரணை என்பது இணையைக் குறிக்கும்.)
வரி 21, 22 - ஆற்றுக்குலை-ஆற்றின் கரை. வாத்தலை - வாய்த்தலை என்பதன் திரிபு.தலை மதகில் இருந்து தொடங்கும் வாய்க்காலைக் குறிக்கும்.
வரி 25 - வசக்கல் - வயக்கல் என்பதன் இன்னொரு வடிவம்.    பண்படுத்திய (திருத்திய) நிலத்தைக் குறிக்கும்.       
                                   
கல்வெட்டுச் செய்தி:
கோயிலுக்கு நிலம் கொடையாக அளிக்கப்படுகிறது. இன்னின்ன நிவந்தங்களுக்காக இன்னின்ன நிலங்கள் என வரையறை செய்து ஆணை (அரசனின்?) வழங்கப்படுகிறது. ஆணையின் செய்திகள் மூலபருடையார்க்குச் சொல்லப்படுகின்றன. மூலபருடையார் அடுத்து ஆணையிடுகிறார்கள். இதை  “மூலபருடையாரும் பணித்து”  என்னும் தொடர் குறிக்கிறது. (பணித்து=கட்டளையிட்டு.). மூலபருடைச் சபையார், பல்வேறு நிவந்தப்பணிகளுக்கும் வாரியம் அமைக்கின்றனர். வாரியத்து உறுப்பினர் (வாரிகர்)  செயல்படுகிறார்கள். கொடை, கொடைச்செலவுக்கான நிலங்கள் ஆகிய குறிப்புகள் ஊர்க்கணக்கருக்கும் தரப்படுகின்றன என்று தெரிகிறது. கொடை நிலங்களின் விவரங்கள் அவற்றின் எல்லைகளோடு சொல்லப்படுகின்றன. இவ் எல்லைகளின் நடுவு பட்ட நிலம் கொடை நிலம். நிலங்களின் பரப்பு, மா, முந்திரிகை ஆகிய  அளவீடுகளால் குறிக்கப்படுகின்றன. கல்வெட்டில் (வரி-24,25) குரங்கன் வசக்கல் என்று வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு நிலத்தின் பெயரில் ”குரங்கு” என்னும் சொல் உள்ளது.

நிவந்தங்கள்:
1  திருவமுது -  நாள்தோறும் கோயிலில் இறைவற்குப் படைக்கும் திருவமுதுக்கு வேண்டிய செலவுக்கு நிலம் மற்றும் பொன் முதலாகிறது.
2 நெய்யமுது
3 திருவாராதனை (பூசை) செய்யும் பிராமணன் ஒருவனுக்கு உணவு.
4 கோயில் பூசை (அர்ச்சநா போகம்)
5 ஸ்ரீபலி - (இந்நிகழ்ச்சி இன்றும் கோயில்களில் நடைபெறுகிறது).
6 பிடி விளக்கினுக்கு எண்ணை.
7 உவச்சுப்பணி செய்யும் ஏழு ஆள்களுக்கு. 


யுவராஜ் தந்த கல்வெட்டுப் படத்தின் செய்தியுடன் மயிலை நூ த லோகசுந்தரம் அளித்த தொல்லியல் துறையின் 1904-ஆம்   ஆண்டறிக்கை க.வெ.எண். 596  செய்தி இந்தக்  கல்வெட்டோடு முற்றிலும் பொருந்துகிறது. அரசர் பெயர் தெளிவாகக் காணப்படாவிட்டாலும், ஆட்சியாண்டு  மூன்று (தமிழ் எண்ணில் குறிக்கப்பட்டுள்ளது) என்பது தெளிவாகக் காணப்படுகிறது. நிவந்தங்களின் குறிப்புகளும் நாம் படித்தவற்றோடு  முற்றும் பொருந்துகின்றன. அரையர் ஆசாரகாந்த ப்ரஹ்மாதிராஜர்  என்பாரின் பெயரையும் சரியாக இனம் கண்டுள்ளோம்.  ஓரளவு முழுச் செய்தியும் கிடைத்துள்ளது. இது ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டு.

No 596 of the Annual Report on Epigraphy 1904/No 3 of the South Indian Inscriptions vol XIII – On the north wall of the temple – Written in Tamil in 25 lines – incomplete – dated to some regnal year of the Chola king Rajakesarivarman (Rajaraja I), approximately to 987 CE  – Records on the orders of the araiyar Acharakanta-Brahmadhiraja, the mulaparadai of Mahendramangalam, a brahmadeya, constituted a new variyam (committee) consisting of a kanakku and certain members to take stock of tax free devadana lands belonging to the temple of Tirukkutakkutturai-Perumanadigal in the village and to make provisions for the various services in the temple. The details of allocation of fields for each services are elaborately given. It is said that provisions was made for seven persons to play music during the sribali service three for mattali, one for Karadigai, one for talam, one for padagam and one for segandigi.

யுவராஜ் அமிர்தத பாண்டியன் அவர்களின் தொடர்ந்த முயற்சிகளுக்கும். நூ.த.லோ,சு.ஐயா அவர்களின் தேடல் திறனுக்கும்  நன்றி சொல்லவேண்டும். கல்வெட்டுப்படித்தலில் என் பயிற்சியும்  மேம்பட்டது எனலாம். நன்றி.




 


No comments:

Post a Comment