Friday, August 25, 2017

மனிதம் சுடர்க!

-- ருத்ரா இ பரமசிவன்
 



நடந்து செல்.
நிமிர்ந்து செல்.

வானம் மட்டுமே உன்னை இடிக்கும்.
அப்போதும் அந்த‌
வானத்தோடு கொஞ்சம் கிசு கிசுத்துப்பார்.
அன்பும் அறிவுமே
இங்குக் கடல்கள்
இங்கு வானங்கள்
இங்கு விண்வெளி மண்டலங்கள்
என்று சொல்லிப்பார்
இப்போது
வானம் உன் காலடியில்.

உன் காலடிகள் தோறும்
அத்வைதம் தான்.
மானிடத்துள் கடவுளர்கள்.
கடவுள் எனும் பாஷ்யம்
பல்லுயிர் நேசமே.
இதில் வெட்டரிவாள்களுக்கும்
வேல் கம்புகளுக்கும்
இடமில்லை.
துப்பாக்கிகள் கூட‌
முறிந்து போகும்
சோளத்தட்டைகளே.

உலக மானிடம் என்ற‌
பேரொளியில்
சில்லறை மதங்கள்
வெறும் மூளித்தனமான‌
இரைச்சல்களே.
உன் கடவுள் என் கடவுள்
என்று ஜீவ அப்பத்தை
கூறு போட்டு
தின்னும் குரங்குகள் அல்ல‌
நாம்.
அது என்ன தான்
என்று
அறிவின் நுண்ணோக்கியிலும்
ஆய்வின் விண்ணோக்கியிலும்
உற்றுப்பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும்.
இது தான்
என்று சமாதி கட்டும்போது
அதில் நசுங்கும்
சிற்றெறும்பின் குரல்
உன் காதுகளில் விழவில்லையா?
ஆம்..
அறிவு ஊர்ந்து செல்லும் இடங்கள்
எத்தனை எத்தனையோ?
அதன் தடம் தெரிந்தால் போதும்.
மாய சொப்பனங்களுக்கு
வர்ணங்கள் பூசாதே!
கலக்கங்களையும் அச்சங்களையும்
கல்வெட்டுகள் ஆக்காதே..

நகர்ந்து கொண்டே இரு.
சூரியன் ஆனாலும்
பூமி ஆனாலும்
புளூட்டோ ஆனாலும்
நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
நகர்ந்து கொண்டே இருக்கும்போது தான்
நிற்கவும் செய்கிறீர்கள்.
அந்த இனர்ஷியா எனும்
அக ஈர்ப்பும் புற விடுப்பும்
சமம் ஆகும் ஒரு புள்ளியை
கணிதப்படுத்துவதில் தான்
விஞ்ஞானிகள்
தங்கள் ஆயுட்காலங்களையெல்லாம்
தொலைத்து இருக்கிறார்கள்.
விருப்பு வெறுப்பு எனும்
உணர்ச்சிகள்
தீயாக உன்னைச்சூழ விடாதே!
சிவ உருவெளி எனும்
சச்சிதானந்தங்கள்
எல்லா மக்களும்
எல்லா மக்களுக்குமாக‌
வாழ்ந்து இன்புறுவதே.
வேறு நமைச்சல்களுக்கு இடமில்லை.
எல்லா உயிர்களின் ஊற்றுக்கண்ணும்
மனிதம் வழியாகத் திறக்கட்டும்.
அது திக்கெட்டும் பாயட்டும்.
மனிதம் வாழ்க!
மனிதம் சுடர்க!

______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________

No comments:

Post a Comment