Tuesday, August 22, 2017

பழந்தமிழ்ப் பாடல்களாக உரைகாரர் காட்டும் விடுகதைகள்

-- நூ.த.லோக சுந்தரம்


பழந்தமிழ்ப் பாடல்களாக உரைகாரர் காட்டும் விடுகதைகள் - நச்சினார்க்கினியர் உரை வழி கண்ட சில . . .


புகுமுன்-முன்குறிப்பு:
பல ஆண்டுகளுக்கு முன் செவ்விய மொழியாம் நம் தமிழுக்கு மதுரைத் திட்டம் எனும் பயன் மிகு மின்னூலகத் திட்டத்திற்காக நூற்றுக்கணக்கான நூல்களை பல்வேறு நூலகங்களில் தேடிய நிலையில் கண்ட பெருநூல் தொகுப்புகளில்,  பல பழம் ஆசிரியர்கள் தம்  தொல்காப்பிய உரைகளும்  கண்டேன்.  அவற்றைப் பார்க்கும் நேரம், அவற்றின் ஊடே உரைவிளக்கும் நிலையில் காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகளாக பற்பல  நூல்களின் பாடல்கள் காட்டப்பட்டுள்ளன.  அவற்றில் தற்காலம் யாவரும் தொடர்பு கொள்நிலையில் பலவகை ஊடகங்களில் கிட்டுவன நீங்கலாக,  இவை யாவும் எந்தநூலைச் சார்ந்தவை என என்னால் அறிய இயலா நிலையில் உள்ளன எனப்பட்டனவற்றைத் தொகுக்க தொடங்கினேன்.  ஆனால், எவர்க்கும் எந்நாளும் நேரும் தடைகள் இயற்கையாக வந்து தொகுப்புப் பணி ஒரு சிறு தூரமே சென்றது.   'நச்சினார்க்கு இனியனாரின் மேற்கோள்கள் தொகுப்பு' எனும் தலைப்பின் ஓட்டம் நின்றது. இத்தொகுப்பில் இனம் தெரியாத நூல்களின் பாடல்களுடன் நூற்பாக்களும் அடங்கும். அத்தொகுப்பின்  முன்னோட்டமாக வைத்த பத்தியை இங்குக் காண்க. அதனில் நகைச்சுவை எனும் மெய்ப்பாட்டில் வருவனவற்றால் தமிழ் மொழி மீது சிலருக்கு ஆர்வம் பிறக்கலாம் எனும் கருத்தில் வைக்கும் விடுகதைப்  பாடல்கள் இவை.

வழங்கு பழம் சங்கநூல்களில் விரவாது, தனிப்பாடல்களாகவோ மற்றும் யாதோ ஒரு பிற்கால நூல்தம்  பாடல் வரிகளாகத் தோன்றுவன மட்டும் ஈங்கு படைக்கப் பட்டுள்ளன.  புறத்திரட்டு, பெருந்தொகை,  நீதித்திரட்டு, பன்னூல் திரட்டு, தனிப்பாடல் திரட்டு, சீட்டுக்கவித் திரட்டு என்பன சில திரட்டு நூல்கள். அழிந்துபட்ட பல நூல்களினின்று மேற்கோளாக மேற்கண்ட திரட்டு நூல்களில்  குறையாக உதிர்ந்தனவாகக் கிடைத்த தொன்மை வாய்ந்த பாடல்களைத் தொகுத்து அவற்றின் சிற்சில கீற்றுக்களாவது நமக்குக் கிடைக்கச் செய்து பெரியதொரு தொண்டு புரிந்துள்ளன.  இவ்வகையில் முத்தொள்ளாயிரம், வளையாபதி, போல்வனவற்றின் பாடல்கள் சிற்சிலவாவது கிட்டினமை அறிந்திருப்பீர்.

பல உரைஆசிரியர்தம் மேற்கோள்கள் வழி மட்டும் சேர்மமாகவே காண்பவற்றில் மேற்படி உரையில், நூல்பெயர் மட்டும்  அறிந்து, அவற்றின் தனிப்பாக்களாய் ஆனால் சிறுதொகுதி அளவாவது ஆவன, அவ்வத் தலைப்புகளில் படைக்கப்பட்டு தகடூர் யாத்திரை, பெரும்பொருள்-விளக்கம், ஆசிரியமாலை, குண்டலகேசிப் போல்வன (இவை என்னால்) மதுரை திட்டத்தில் பதியப்பட்டுள்ளன காணலாம்.


நச்சினார்க்கினியர் உரைமேற்கோள் பாடல்கள் திரட்டு - பகுதி 1:
கீழ்க்காணும் பாடல்களில் அடியில் காணும் எண் எந்நூற்பாவின் கீழ் ஆசிரியர் இப்பாடல்களைக் காட்டினார் என்பதனை காட்டும் குறிப்பே.  இப்பாடல்கள் அவை தாங்கு நூல்பெயர் அறியப்பட வேண்டிய தனிப்பாடல்களின் அல்லது அவற்றின் வரிப்பகுதிகளின் தொகுப்பெனவே கொள்க. புகுநிலையோரும் எளிதாகப் படிக்க சந்தி பிரிக்கப்பட்டன.

"நச்சினார்க்கினியனார் உரை வளம்" என பெருந்தொகுப்பாக கண்டன நச்சினார்க்கினியர் உரையுள் காணும் மேற்கோள்கள் சில...

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - செய்யுளியல்

(1)

அதனில் நூற்பா 176,

"பிறை கவ்வி மலை நடக்கும்"   
          [= யானை (பிசி), ஒப்போடு புணர்ந்த உவமம்]


வினா:  இது எது எவ்வடி ???                           
விடை:  எறும்பி



(2)

நூற்பா 176 அதனிலேயே,
 
"முத்துப்போல் பூத்து முகிழில் கிளிவண்ணம்
நெய்த்(து) ஓர் குருதி நிறம் கொண்டு வித்துதிர்த்து"
          [=கமுகு (பிசி), ஒப்போடு புணர்ந்த உவமம்]


வினா: இது என்ன  எப்பொருளைக் காட்டும் ???
விடை: பாக்கு



(3)

நூற்பா 176 அதனிலேயே,

"நீராடான் பார்ப்பான் நிறம் செய்யான் நீராடின் ஊராடு நீரில் காக்கை"
          [=நெருப்பு (பிசி), தோன்றுவது கிளந்த துணிவு]


வினா: இது என்ன பொருள் ???                     
விடை: நெருப்பு



(4)

நூற்பா 180 அதனில்,

"குடத்தலையர் செவ்வாயில் கொம்(பு) எழுந்தார் கையின்
அடக்கிய மூக்கினார்  தாம்"  
          [=குஞ்சரம்-குறிப்புமொழி, எழுத்தாலும் சொல்லலும் பொருள் அரியாவாகி  பொருள் புறத்தே நின்றது] 


வினா:  இது எது எவ்வடி ???
விடை: எறும்பி

 

 "இந்நான்கு  பாடல்களில் வரும் விடுகதைகளுக்கும் தமிழ்மொழி புலமை  குறைவுள்ளோரும் முயல்வதில் தவறில்லை.  விடை காண முயலலாம். எனினும் விடைகளை அங்கேயே விளக்கம் பகுதியில் காண்க. இந்நாளில் பலரும் விடை காண்பது மிக மிக அரிதானதாகும்.  நானும் இடர்ப்பட்டவனே. ஆனாலும் ஆசிரியர் காட்டிய குறிப்புவழி விளக்கம் அளிக்க வல்லவனவற்றை  இங்கு வைத்துள்ளேன்


விளக்கம்:
(1) யானை:
— "பிறை கவ்வி";
வெண்மை நிறத்துடன் மெல்லிய திங்களின் பிறைக் கீற்றுப்போல் வளைந்து தன்  வாயிலிருந்து கிளம்பி வெளியாகி வருதலால்; அதனை யானை தனது  வாயிலால் கவ்வியது போல் தோன்றுதல். இஃது, உருவகம்.
எந்த உயிரினத்தாலும் கவ்வ முடியாத நிலவினை வாயினில் பற்றுவதாகக் காட்டுவது.

— "மலைநடக்கும்";
உருவில் பெரியதாகி கரிய நிறத்துடன் ஓர் சிறு குன்றுபோல் அசைந்த நடையில் வருதலால்; இதனில் இரு முரண் தொடைகளை காணலாம்.
எங்கும் மலையோ குன்றோ  தனது நிலையிலிருந்து நகராத ஒன்றினை நடந்து வருவதாகக் காட்டுவது.




[[வேறு:
தென்னிந்திய யானைக்கும் ஆப்பிரிக்க யானைக்கும் வேறுபாடுகள் மூன்று:—
(i) அதன் காதுகள்—  ஆப்பிரிக்க யானையின் மேல் காது தலையில் சேரும் இடம் கிடையாக சென்று தலையுடன் இணையும்.  ஆனால் தமிழகத்து (தென்னிந்திய) யானையின்  காதுகள் மனிதரைப்போல் 'ஒ'கர வடிவில் வளைந்த நிலையில் தலையுடன் இணையும்.

(ii) அதன் நெற்றி—  ஆப்பிரிக்க யானையின் நெற்றியின் மேல்பகுதி இரு பக்கமும் பந்துகள் போன்ற அமைப்பு குறைந்தும், சற்றே பின் நோக்கிச் சாய்ந்திருக்கும்.    ஆனால் தமிழகத்து யானையின் நெற்றியில் இருபக்கமும் உருண்ட பந்துகள்போன்ற அமைப்புடன் சாய்த்து நெடிதாக சாய்த்து  உயர்ந்து காணும்.

(iii) அதன் தந்தம்—  ஆப்பிரிக்க இனத்தினில் ஆண் பெண் இரு பாலுக்கும் தந்தம் உண்டு. ஆனால் தமிழக யானைக்கு சில ஆணிற்கு மட்டுமே தந்தம் வளரும்.  மேலும் சில வைரம் பாயாது வளருமாம். பெண்களுக்குக் கிடையா.]]


(2) கமுகு:
— "முத்துப்போல் பூத்து முகிழில் கிளிவண்ணம் நெய்த்(து) ஓர் குருதி நிறம் கொண்டு வித்துதிர்த்து";
பாக்கு மரம்  இதன் பூ  வெண்மையாகப் பூத்து, பின் பச்சைநிற உருண்டை காய்களாகத் திரண்டு, பின் அவையே சிவந்த  நிறத்தை அடைவது பேசப்படுகின்றது.



[[வேறு:
பாக்கு மரம் பூக்கும் காலங்களில் அதன் தோப்பிலிருந்து நல்ல மணம் வீசுமாம். இவ்வாறாக ஒரு மங்களூர் வாழ் பெண்மணி ஒருமுறை எனது கோவை இரயில் பயணம்  ஒன்றில் காட்டியதும் உண்டு.]]


(3) நெருப்பு:
— "ஊராடு  நீரில் காக்கை"; 
நாளும் முத்தீ பேணுதல் தம் தொழிலாகக் கொண்டவர் பார்ப்பனர்.  தீயுடனேயே நீங்கா தொடர்புடையவராதலால் அவர்களின் நெருப்பு பிணைப்பினால்  அவர் பெயரே நெருப்பினுக்கும் ஆகு பெயராகியது.
அதாவது,
பார்ப்பான் என்றால் தீ = நெருப்பு,
நிறம் செய்யான் = சிவந்த நிறமுடையவன்,
நீரும் நெருப்பும் எதிரெதிரானது. ஒன்று இருக்குமிடம் மற்றொன்று கூடாது.  ஒருவேளை இரண்டும் கலந்தால், அதாவது நெருப்பின் மேல் நீர் விழுந்தாலோ அல்லது  நீரில் நெருப்பு விழுந்தாலோ,  நெருப்பு காக்கையாகிவிடுமாம். அதாவது, ஊராடு  நீரில் காக்கை என்பது, சிவப்பு நிறம் மாறி கரிய நிறம் பெற்றுவிடும் என்று காட்டுகின்றது.

 

>[[வேறு:
இந்த நூற்பா மறைமுகமாகப் பார்ப்பனர் பொதுவாக மற்ற இனத்தினருடன்  கலக்கக்கூடாது. அப்படிக் கலந்தால் அவர்கள் கருநிறமுடையவராகி தன் பண்பை முற்றிலும் இழந்துவிடுவார் எனக்காட்ட இயற்றப்பட்டிருக்க வேண்டும்]]


(4) யானை:
— "குடத்தலையர் செவ்வாயில் கொம்(பு) எழுந்தார் கையின் அடக்கிய மூக்கினார்  தாம்";    
யானைகளுக்கு நடு உச்சி தலையின் இடையில் கிண்ணம்போல் இரு குழி ஒன்று உண்டு. தெருக்களில் வரும் யானைகளை விளையாட்டாகச் சிறுவர்களை முதுகில் ஏற்றி அவரிடம் பெறும் சிறு காசுகளை யானை தனது துதிக்கையால் பெற்று தர,  பின் பாகன் பெற்று இந்தக் கிண்ணம்  (குடம்) போன்ற குழியில்தான் போட்டுவைப்பதை நாளும் காணலாம்.


ஆக, குழி உடையத்  தலையை பெற்றது யானை என்பதை 'குடத்தலையன்' என்பது குறிக்கிறது.  தனது சிவந்த வாயிலிருந்து எழும் இரு தந்தங்களை உடையது  என்பதை 'செவ்வாயில் கொம்பெழுந்தான்' என்பது குறிக்கிறது.
யானை அதன் மிகத் திறனுடன் பயன்கொள்ளவல்ல துகிக்கையானால் பல்வேறு பணிகளை செய்து கொள்ளும் திறனுடையது என்பதை  யாவரும் அறிவர்.  அதன் முகத்தின் நுனியில்தான்  அதன் மூக்கு உள்ளது. அதன் வழிதான் உயிர் மூச்சுவிடுகின்றது. அதனால் கையில் அடக்கிய மூக்கினார்  என்றது இந்தப் புதிர். 




________________________________________________________ 








நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
________________________________________________________  

No comments:

Post a Comment